60 வயது பெண்ணின் கருப்பையில் 36 ஆண்டுகளாக இருந்த குழந்தையின் எலும்புக்கூடு அகற்றம்
நாக்பூர்: மகாராஷ்டிராவில் 36 ஆண்டுகளாக தாயின் கருப்பையில் இருந்த குழந்தையின் எலும்புக்கூட்டை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்கபாத் மாவட்டம் பிபாரியாவைச் சேர்ந்தவர் காந்தாபாய் குன்வந்த் தாக்ரே. அவர் தனக்கு அடிக்கடி வயிறு வலிப்பதாக கடந்த இரண்டு மாதங்களாக தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து அவரை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள லதா மங்கேஷ்கர் மருத்துவமனைக்கு கடந்த வாரம் அழைத்து வந்துள்ளனர்.
முதலில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் ஏதோ கட்டி இருப்பதாகவும், அது புற்றுநோயாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். பின்னர் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தபோது தான் அது குழந்தையின் எலும்புக்கூடு என்பது தெரிய வந்தது.
இதையடுத்து நாக்பூரில் உள்ள என்.கே.பி. சால்வே இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயன்சஸில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் எலும்புக்கூட்டை மருத்துவர்கள் குழு அகற்றியது.
60 வயதாகும் காந்தாபாயின் வயிற்றில் அந்த எலும்புக்கூடு கடந்த 36 ஆண்டுகளாக இருந்துள்ளது. முன்னதாக இது போன்று யாருக்காவது கருப்பையில் இருந்து குழந்தையின் எலும்புக்கூடு அகற்றப்பட்டதா என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்தனர். அப்போது பெல்ஜியத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கருப்பையில் குழந்தையின் எலும்புக்கூடு 18 ஆண்டுகள் இருந்தது தெரிய வந்தது.