திருமுருகன் காந்திக்கு மட்டுமல்ல.. இடதுசாரி சிந்தனையாளர்கள் ஐவர் மீதும் பாய்ந்தது உபா சட்டம்
டெல்லி: இடதுசாரி சிந்தனையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது.
மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி மீது சமீபத்தில் நுங்கம்பாக்கம் போலீசார் உபா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சட்டம் 1967ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
தடா, பொடா சட்டங்களை போல மிகவும் கடுமையான சட்டம் இது.
கடுமையான சட்டம்
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் என்ற (Unlawful Activities Prevention Act) பெயரிலான, இந்த சட்டத்தின்கீழ், வாரண்ட் இல்லாமல், ரெய்டு நடத்த முடியும். கைது செய்ய முடியும். 6 மாதங்கள் விசாரணையின்றி சிறையில் அடைக்க முடியும். பொதுக்கூட்டம் ஒன்றில், ஓராண்டு முன்பாக, திருமுருகன் காந்தி பேசுகையில், பாலஸ்தீனத்தை போன்ற போராட்டம் வெடிக்கும் என கூறிய கருத்துக்காக இப்போது அவர் மீது அந்த வழக்கு பாய்ந்தது.
இடதுசாரி சிந்தனையாளர்கள்
இதேபோலத்தான், இப்போது, பீமா கோரேகானில் தலித்துகள் மற்றும் உயர் ஜாதியினருக்கு நடுவேயான மோதல் சம்பவத்தின்போது தலித்துகளுக்கு ஆதரவாக இருந்த இடதுசாரி சிந்தனையாளர்கள் கைது நடவடிக்கையிலும் உபா சட்டம் பாய்ந்துள்ளது. தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கர் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் நேற்று போலீஸ் சோதனை நடத்தப்பட்டது. இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான, வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர், இந்த சோதனைகளின்போது போலீசாரால் உபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமர்சனங்கள்
சட்ட விரோத இயக்கங்கள், தீவிரவாத குழுக்களை சேர்ந்தவர்கள் மீதுதான் இந்த சட்டப்பிரிவின்கீழ் வழக்கு தொடருவது வழக்கம். ஆனால் சமீப காலங்களில், வலதுசாரிகளுக்கு எதிராக பொதுக்கூட்டங்களில் பேசுவோர், எழுதுவோர் மீதும் இந்த சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதன் மூலம் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
|
ஆர்எஸ்எஸ் மட்டுமே
சமூக செயற்பாட்டாளர் அருந்ததி ராய், ஒருபடி மேலே போய், இந்தியாவில் எமெர்ஜென்சி நிலை போன்ற சூழல் உருவாகியுள்ளது. கூட்டாக கொலை செய்வோர் கவுரவிக்கப்பட்டு, நீதி கேட்போர் கைது செய்யப்படுவதை வைத்து பார்க்கும்போது, நாடு எங்கே செல்கிறது என்பது புரிகிறது, என்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், இந்த நாட்டில் ஆர்எஸ்எஸ் என்ற ஒரு என்ஜிஓ தவிர்த்து பிற என்ஜிஓக்கள் மூடப்பட வேண்டும் என்று மத்திய அரசு நினைத்து செயல்படுகிறது என்று நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.
பாதுகாப்பே முக்கியம்
விமர்சனங்கள் குறித்து உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு விஷயம், அரசியலை விட முக்கியம் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கியுள்ளார் கிரண் ரிஜிஜு. பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதுதொடர்பாக மகாராஷ்டிராவில் கைப்பற்றப்பட்ட கடிதத்தை ஆதாரமாக கொண்டு, இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறுகிறது காவல்துறை தரப்பு.