உபி. உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோகம்.. 12 மாநகராட்சிகளை கைப்பற்றியது.. காங்.கிற்கு பெரும் அடி
லக்னோ: உத்தரபிரதேசத்தில், மொத்தமுள்ள 16 மாநகராட்சிகளில் 12 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
உத்தரபிரதேசத்தில் கடந்த நவம்பர் 22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக 649 இடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது.
ஆரம்பம் முதலே வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ளது. சற்று முன்பு கிடைத்த தகவல்படி, மொத்தமுள்ள 16 மாநகராட்சிகளில் 12 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் கட்சி, 2 மாநகராட்சிகளை கைப்பற்றியுள்ளது. எஞ்சிய இரு மாநகராட்சிகளிலும் பாஜகவே முன்னிலையில் உள்ளது. எனவே தேசிய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், கடும் தோல்வியை சந்தித்துள்ளது.
வாரணாசி, ஆக்ரா, அயோத்தி, மதுரா,கான்பூர், கோரக்பூர், காசியாபாத், பரேலி, ஃபிரோசாபாத், லக்னோ, சஹரன்பூர், ஜான்சி உள்ளிட்டவை
பாஜக கைப்பற்றிய மாநகராட்சிகள்.
காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யாக உள்ள அமேதி தொகுதிக்குட்பட்ட அமேதி நகர் பஞ்சாயத்து் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது காங்கிரசுக்கு மற்றொரு பின்னடைவாகும்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் உள்ளாட்சி தேர்தல் என்பதால், அரசியல் தலைவர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.