மாட்டிறைச்சிக்காக இஸ்லாமிய முதியவர் படுகொலை... ஐ.நா. தலையிட கோரி உ.பி. அமைச்சர் கடிதம்
லக்னோ: மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக முதியவர் படுகொலை போன்ற இந்தியாவில் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று உத்தரப்பிரதேச அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான ஆசாம் கான் கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி கிராமத்தில் இஸ்லாமிய முதியவர் இக்லால் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக ஒரு வதந்தி கிளம்பியது. அதெப்படி மாட்டிறைச்சி சாப்பிடலாம் எனக் கூறி மதவெறிக் கும்பல் இக்லால் மற்றும் அவரது மகனை அடித்து தாக்கியது. இதில் இக்லால் உயிரிழந்தார். இந்தியாவை இந்த சம்பவம் உலுக்கியிருக்கிறது.
இந்நிலையில் இக்லால் படுகொலை போல இந்தியாவில் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.. ஆகையால் நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான ஆசாம் கான் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆசாம் கான் அனுப்பியுள்ள கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:
- பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளின் தலைவர்களிடம் இந்தியா எப்போதும் மதச்சார்பற்ற பன்முகத் தன்மை கொண்டதாக இருக்கும் என உறுதியளித்து வருகிறார்.
- ஆனால் நடைமுறையில் இந்தியாவை 2022-23க்குள் இந்துதேசமாக மாற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளுக்கு பிரதமர் மோடி ஆதரவாக இருக்கிறார்.
- அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் தாத்ரியில் இக்லால் படுகொலை செய்யப்பட்டதும் திட்டமிட்ட சம்பவங்களே.
- 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பது ஒரு திட்டமிட்ட சதி.
- தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற வதந்தியை கிளப்பிவிட்டு இக்லாலை படுகொலை செய்ததும் ஒரு திட்டமிட்ட சதி.
- மத்திய உள்துறை அமைச்சரின் மகனின் அரசியல் லாபங்களுடன் இணைந்ததாக தாத்ரி படுகொலை இருக்கிறது.
- இந்துஸ்தான் என்பது இந்துராஷ்டிராவாக உருவாகிவிட்டால் இங்கே முஸ்லிம்களின் நிலை என்ன?
- முஸ்லிம்கள் மத அடிப்படையிலான ஒருநாட்டில்தான் வாழ வேண்டும் என்று விரும்பியிருந்தால் 1947ஆம் ஆண்டே பாகிஸ்தானுக்கு சென்றிருப்பார்களே..
- ஆனால் மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கொடுத்த வாக்குறுதியால்தான் இங்கேயே முஸ்லிம்கள் தங்கிவிட்டனர்.
- ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டைக் கோருவது என்பது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை அல்ல..
- பாபர் மசூதி இடிப்பின் போது எங்கள் நாட்டின் தலைவர்கள் செயல்பட தவறிவிட்டனர் என்பதை நினைவூட்டுகிறேன்.
- ஆகையால் ஐ.நா. பொதுச்செயலர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இந்தியாவில் வாழும் அனைத்து மக்களின் நம்பிக்கைகள் காப்பாற்றப்படும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் உள்ளிட்டோரை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு ஆசாம் கான் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
பா.ஜ.க கடும் கண்டனம்
இதனிடையே ஐ.நா. தலையீட்டை கோரி ஆசாம் கான் கடிதம் எழுதியுள்ளதற்கு பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர் கூறுகையில், ஆசாம் கான் இடம்பெற்றிருக்கும் உத்தரப்பிரதேச மாநில அரசின் இயலாமையின் வெளிப்பாடுதான் தாத்ரி படுகொலை.. இது மலிவான விளம்பரம் தேடுகிற செயல்.. அறிவில்லாமல் பேசுகிறார்கள்.. இப்படியான நபர்கள் குறித்து கருத்து தெரிவிக்கவே நான் விரும்புவதில்லை... தாத்ரியில் உயிரிழந்த இக்லால் குடும்பத்துக்கு மாநில அரசுகளே நிதி கொடுப்பதை தொடங்குவது சரியல்ல.. அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றார்.