உ.பி.: போராட்டத்தின்போது போலீஸ் அதிகாரி தாக்கியதில் கர்ப்பிணிக்கு கருச்சிதைவு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கர்ப்பிணியை போலீஸ் அதிகாரி ஒருவர் அடித்ததில் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னார் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் போலீசார் ஒருவரை கைது செய்தனர். இதையடுத்து கைது நடவடிக்கையை எதிர்த்து கிராமத்தினர் காவல் நிலையத்திற்கு முன்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய சில பெண்களை போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார். அப்போது அவர் 35 வயது கர்ப்பிணி ஒருவரை தாக்கியதில் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து அந்த போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அவர் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரி தாக்கியதில் கர்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.