அமெரிக்க விசா கட்டண உயர்வு... ஐ.டி நிறுவனங்களை சரிவில் தள்ளும் முயற்சி - அருண் ஜெட்லி
டெல்லி: அமெரிக்காவில் விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் தகவல் தொழில்நுட்பத்துறை பெருமளவில் பாதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஐ.டி. என்று சொல்லப்படுகிற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் அமெரிக்காவின் ஹெச்-1 பி விசா மற்றும் எல்-1 விசா மிகவும் பிரசித்தி பெற்றுள்ளன.

இந்த நிலையில் அங்கு சுகாதார திட்டம், பயோமெட்ரிக் கண்காணிப்பு அமைப்பு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்காக தேவைப்படுகிற நிதியை திரட்டுவதற்காக அமெரிக்காவின் ஹெச்-1 பி விசா மற்றும் எல்-1 விசா கட்டணங்கள் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. அதாவது, சிறப்பு கட்டணம் என்ற பெயரில் 4,500 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.97 லட்சம்) விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
இந்த கட்டண உயர்வு இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிப்பையும் உருவாக்கி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க விசா கட்டண உயர்வுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்), உலக வங்கி கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்தி காந்ததாஸ், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
வாஷிங்டன் நகரில் அவர் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் தூதர் மிக்கேல் புரோமேனுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் அமெரிக்க விசா கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில கருத்துகளை தெரிவித்தார். "அமெரிக்க விசா கட்டண உயர்வு என்பது பாரபட்சமானது. இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications