சோராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கு: மாஜி போலீஸ் அதிகாரிகள் வன்சாரே, தினேஷ் விடுவிப்பு
சோராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் வன்சாரே, தினேஷை மும்பை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
மும்பை: குஜராத்தில் நடைபெற்ற சோராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் வன்சாரே, தினேஷ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி போலீஸ் காவலில் இருந்த சோராபுதீன் ஷேக் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியும் பயங்கரவாத தடுப்பு படையினரால் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2006ம் ஆண்டில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான துள்சிராம் பிரஜாபதி குஜராத் போலீசாரால் எண்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். இந்த 3 கொலைகளிலும் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
மும்பையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமித்ஷா விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் போலீஸ் அதிகாரிகள் வன்சாரே மற்றும் தினேஷ் ஆகியோர் மீதும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. தற்போது மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில்குமார் ஜே.சர்மா, வன்சாரே, தினேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாததால் இருவரும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பளித்தார்.