வருணுக்கு பிரச்சினையாகக் கூடும்..இருவரது சித்தாந்தமும் வேறு.. தனது "கசின்" குறித்து ராகுல் ஓபன் டாக்
அமிர்தசரஸ்: அமிர்தசரஸ்: வருண் காந்தி பல ஆண்டுகளுக்கு முன்பாக தன்னிடம் ஆர்.எஸ்.எஸ் நல்ல பணிகளை செய்து வருவதாக சொல்ல முயற்சித்தார் என்றும் வருண் காந்தி இப்படி கூறியதற்கு, "நமது குடும்பம் எதற்காக போராடுகிறது என்பதை படித்து இருந்தாலோ.. பார்த்து இருந்தாலோ.. இதை ஏற்றுக்கொள்ள மாட்டாய்" என்று தான் பதிலளித்ததாக ராகுல் காந்தி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாத யாத்திரை கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா, டெல்லி வழியாக தற்போது பஞ்சாப் சென்றுள்ளது.
என் தலையை துண்டாக வெட்டினாலும்.. ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்ல மாட்டேன் - ராகுல் காந்தி 'பரபர' பேச்சு
ராகுல் காந்தியிடம் கேள்வி
பஞ்சாப்பில் ராகுல் காந்தி ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ளார். தனது யாத்திரைக்கு இடையே செய்தியாளர்களை சந்திப்பது, கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது என பரபரப்பாக இருக்கும் ராகுல் காந்தி இன்று ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராகுல் காந்தியிடம் தனது ஒன்றுவிட்ட சகோதரரான வருண் காந்தி ஜோடோ யாத்திரையில் பங்கேற்பாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி கூறியதாவது:- v
என்னால் அதை செய்ய முடியாது
வருண் காந்தி பாஜகவில் உள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையில் வருண் பங்கேற்றால் அவருக்கு அது பிரச்சினையாக அமையலாம். எனது சித்தாந்தம் அவருடைய(வருண்) சித்தாந்தத்துடன் பொருந்தாது. நான் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு ஒருபோதும் செல்லப்போவது இல்லை. அப்படி போவதாக இருந்தால் அதற்கு முன்பாக எனது தலையை கொய்து விடலாம். வருண் ஒரு காலத்தில் அந்த சித்தாந்தை ஏற்றுக்கொண்டர். தற்போது அதை தொடர்கிறார். ஆனால் என்னால் அதை செய்ய முடியாது.
நீங்கள் படித்து இருந்தால்..
வருண் ஒரு காலத்தில் அந்த சித்தாந்தத்தை உள்வாங்கினார். இப்போதும் அதை பின் தொடர்கிறார்.என்னால் அதை ஏற்க முடியாது. ஆர்.எஸ்.எஸ் சிறப்பாக பணிகளை செய்து வருகிறது என என்னிடம் வருண் காந்தி பல ஆண்டுகளுக்கு முன்பாக சொல்ல முயற்சித்தார். நான் வருண் காந்தியிடம் கூறியது என்னவென்றால், நமது குடும்பம் எதற்காக போராடுகிறது என்பதை நீங்கள் படித்து இருந்தாலோ பார்த்து இருந்தாலோ..அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்றேன்" என்றார்.
பாஜகவுக்கு தர்மசங்கடம்
உத்தர பிரதேசத்தின் பிலிபட் தொகுதி எம்.பியான வருண் காந்தி சமீப காலமாக பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தனது தாயார் மேனகா காந்திக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படாதது வருண் காந்திக்கு கடும் அதிருப்தியை கொடுத்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால், சமீப காலமாக பல்வேறு விஷயங்களில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு தர்மசங்கடத்தை கொடுக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
வருண் காந்தி பங்கேற்பாரா
பாஜகவின் இளம் பொதுச்செயலாளராக ஒரு காலத்தில் இருந்த வருண் காந்தி தனக்கு இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருப்பதால் விரைவில் பாஜகவில் இருந்து வெளியேறி வேறு கட்சியில் இணையலாம் என்று அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் வருண் காந்தி பங்கேற்பாரா என்று அவரது செய்தியாளர்கள் கேள்வியை முன் வைத்து இருந்தனர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, வருண் காந்தியை அன்போடு சந்திக்க தயாராக இருப்பதாகவும் ஆனால், அவரது சித்தாந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பதிலளித்துள்ளார்.