லலித் மோடி விவகாரத்தில் அமித்ஷாவுடன் மோதல்? பஞ்சாப் பயணத்தை திடீரென ரத்து செய்தார் வசுந்தரராஜே!
ஜெய்ப்பூர்: லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவுக்கும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியாவுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் அமித்ஷவுடன் இன்று ஒரே மேடையில் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியை வசுந்தரராஜே சிந்தியா ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதி முறைகேட்டில் சம்பந்தப்பட்ட ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி, மனைவியின் சிகிச்சைக்காக போர்ச்சுக்கல் செல்வதற்கு பயண ஆவணங்கள் கிடைக்க உதவியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேயும் உதவியதாக லலித் மோடியே கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை அன்று வசுந்தரா ராஜே, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவிடம் தொலைபேசியில் பேசினார், அப்போது தன்னுடைய நிலைப்பாட்டை அவர் விளக்கினார் என்று செய்திகள் வெளியாகின..
இந்த நிலையில் சீக்கியர்களின் முக்கிய குருவால் உருவாக்கப்பட்ட அனந்த்பூர் ஷாகிப்பின் 350வது ஆண்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோருடன் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவும் கலந்துக் கொள்வதாக இருந்தது.
இந்நிலையில் லலித் மோடியின் விவகாரம் பூதகரமாகி உள்ளது; வசுந்தர ராஜேவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து உள்ளது. தற்போது வசுந்தர ராஜே தனது பஞ்சாப் பயணத்தை ரத்துசெய்து உள்ளார். லலித் மோடி விவகாரத்தை அடுத்து முதல் முறையாக வசுந்தர ராஜே அமித் ஷாவை நேருக்கு நேர் சந்திப்பதாக இருந்தது.
தற்போது இது ரத்து ஆகிஉள்ளது. ஆனால் முதுகுவலி காரணமாக ராஜே தனது பயணத்தை ரத்துசெய்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.