புற்றுநோயை குணப்படுத்த இந்திய வேத பண்டிதர்கள் உதவியை நாடிய ஓமன் சுல்தான்
பெங்களூரு: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஓமன் சுல்தான் குபூஸ் பின் சையது அல் (72) குணமடைய வேண்டி கர்நாடகாவை சேர்ந்த 22 வேத பண்டிதர்கள் சிறப்பு ஹோமம் நடத்தியுள்ளனர்.
வளைகுடா நாடான ஓமனின் சுல்தான் சுல்தான் குபூஸ் பின் சையது அல் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நோயை குணப்படுத்த மருத்துவ சிகிச்சைகள் ஒருபக்கம் நடந்துகொண்டுள்ள போதிலும், இறை சக்தியின் உதவியை நாட சுல்தான் முடிவு செய்துள்ளார். சுல்தானின் ஆலோசகராக உள்ள குஜராத்தை சேர்ந்த நபரிடம் கூறி சிறப்பு ஹோமத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து பெங்களூருவை சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகர சுவாமி தலைமையில் 22 பேர் கொண்ட வேத பண்டிதர்கள் குழு மஸ்கட் சென்று, அங்கிருந்து சுமார் 41 கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள பர்கா நகரில் கடந்த 9ம்தேதி முதல், தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு ஹோமங்களை நடத்தியுள்ளனர். இந்த ஹோமத்தில், சுல்தான் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஓமன் நாட்டு வாழ் இந்தியர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
மஹா தன்வந்த்ரி யக்ஞம், பூர்ண நவகிரக சாந்தி ஹோமம், மஹா மிருத்யுஞ்சயா யக்ஞம் மற்றும் மஹா விஷ்ணு யக்ஞம் ஆகிய பூஜைகளை நடத்தியதாக சந்திரசேகர் சுவாமி தெரிவித்தார்.