"கல்வியை காவிமயமாக்குகிறோமா.. அதில் என்ன தவறு என கேட்கிறேன்.." வெங்கையா நாயுடு ஓபன் டாக்
டேரடூன்: நாட்டின் கல்வி முறையைக் காவிமயமாக்குவது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஸ்வ வித்யாலயாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தெற்காசிய நிறுவனத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகத் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நாட்டில் உள்ள கல்வி அமைப்புகள் குறித்தும் கல்வி கல்வியைக் காவிமயமாக்குகிறது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் கிடைத்த ஒரு நிமிடத்தை பக்காவாக பயன்படுத்திய திருச்சி சிவா! பாராட்டிய வெங்கய்ய நாயுடு
வெங்கையா நாயுடு
இது குறித்து வெங்கையா நாயுடு மேலும் கூறுகையில், "சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். மெக்காலே கல்வி முறையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டிய நேரம் இது. மெக்காலே கல்வி முறை தான் நம் நாட்டில் வெளிநாட்டு மொழியைத் திணித்தது. இது கல்வியை உயர்தட்டு மக்களுக்கு மட்டுமானதாக மாற்றி வைத்துள்ளது. நூற்றாண்டு கால காலனித்துவ ஆட்சி நம்மைத் தாழ்த்தப்பட்ட இனமாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தது. இது நமது சொந்த கலாசாரம். இது நமது பாரம்பரிய ஞானத்தை இழிவுபடுத்தவே கற்றுக் கொடுக்கிறது.
தாய்மொழியை நேசிக்க வேண்டும்
இந்த கல்வி முறை ஒரு தேசமாக நமது வளர்ச்சியைக் குறைத்துள்ளது. நமது பாரம்பரியம், கலாசாரம், முன்னோர்கள் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். நாம் நமது வேர்களை நோக்கித் திரும்ப வேண்டும். காலனித்துவ மனப்பான்மையைக் கைவிட்டு, நம் குழந்தைகளுக்கு அவர்களின் இந்திய அடையாளத்தில் பெருமிதம் கொள்ளக் கற்றுக்கொடுக்க வேண்டும். முடிந்தவரை இந்திய மொழிகளை நாம் கற்க வேண்டும். நாம் நம் தாய்மொழியை நேசிக்க வேண்டும். அறிவுப் பொக்கிஷமாக விளங்கும் நமது வேதங்களை அறியச் சமஸ்கிருதம் கற்க வேண்டும்.
தாய் மொழி
இளைஞர்கள் தங்கள் தாய்மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். அரசு அறிவிப்புகள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் தாய்மொழி உங்கள் கண் பார்வை போன்றது, அதேசமயம் வெளிநாட்டு மொழி உங்கள் கண்ணாடி போன்றது. இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை என்பது நமது கல்வி முறையை இந்தியமாக்கும் முயற்சி ஆகும். அதில் தாய்மொழிகளை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
வெளிநாட்டுப் பிரமுகர்கள்
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பிரமுகர்கள், தங்கள் சொந்த மொழியில் பெருமை கொள்வதால், ஆங்கிலம் தெரிந்தாலும், அவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசுகின்றனர். ஆனால், இங்குச் சிலர் கல்வியைக் காவி மயமாக்குவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். நான் கேட்கிறான், கல்வியைக் காவிமயமாக்குவதில் என்ன தவறு? நமது பண்டை நூல்களில் சர்வே பவந்து சுகினா (அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள்) மற்றும் வசுதைவ் குடும்பம் (உலகம் ஒரே குடும்பம்) ஆகிய தத்துவங்கள். இவை தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை இன்றும் வடிவமைப்பதாக உள்ளன.
இந்திய கலாசாரம்
பொதுவான வேர்களைக் கொண்ட அனைத்து தெற்காசிய நாடுகளுடனும் இந்தியா வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது. சிந்து சமவெளி நாகரீகம் ஆப்கானிஸ்தானிலிருந்து கங்கை சமவெளி வரை பரவியுள்ளது. எந்த நாட்டையும் முதலில் தாக்கக்கூடாது என்ற எங்கள் கொள்கை உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. இது போர் வீரர்களின் நாடு. வன்முறையை விட அகிம்சையையும் அமைதியையும் தேர்ந்தெடுத்த மன்னன் அசோகர்.
இந்தியப் பல்கலைக்கழகங்கள்
பண்டைய இந்தியப் பல்கலைக் கழகங்களான நாளந்தா மற்றும் தக்ஷிலாவில் படிக்க உலகம் முழுவதும் இருந்து மக்கள் வந்து இருந்தனர். ஆனால் அதன் செழுமையின் உச்சத்தில் கூட, இந்தியா எந்த நாட்டையும் தாக்க நினைக்கவில்லை, ஏனென்றால் உலகிற்கு அமைதி தேவை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று அவர் பேசினார்.