"ஓஹோய்!".. அப்பா ரெஸ்ட் எடுக்கட்டும்.. இனி தேமுதிகவை நான் சுமக்கிறேன்.. விஜய பிரபாகரன் பகீர் பேச்சு!
ஸ்ரீவில்லிபுத்தூர்: எனது தந்தை விஜயகாந்த் எவ்வளவோ மக்கள் நல பணிகளை செய்துவிட்டார். அவர் இனி ஓய்வெடுக்கட்டும். அவர் பணியை இனி நான் செய்கிறேன் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.
அவர் செய்தியாளர்களையும் சந்தித்தார். அவர் கூறுகையில் தேமுதிக அதே எழுச்சியுடன்தான் இருக்கிறது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் சகஜம் தான். விரைவில் தேமுதிகவை உச்சத்திற்கு கொண்டு செல்வோம்.

மக்கள் அங்கீகரிக்கவில்லை
மக்கள் எங்களை தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்கவில்லை. அதனால் நாங்கள் தோற்றோம். ஆனாலும் எங்கள் கட்சிக்கான வாக்குச் சதவீதம் அப்படியேதான் உள்ளது. தொண்டர்களும் அதே புத்துணர்ச்சியுடன்தான் இருக்கிறார்கள். தேமுதிகவை எதற்காக ஆரம்பித்தோமோ அந்த லட்சியத்தை நோக்கி பயணிப்போம்.

நல்லாட்சி
திமுகவின் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும். தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை நலமாக உள்ளது. பழைய நிலைமைக்கு திரும்ப சிறிது காலம் பிடிக்கும். எங்களால் முடிந்த முயற்சிகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்.

கட்சி
மக்களை எப்போது சந்திக்க வேண்டுமோ அந்த நேரத்தில் அவர் நிச்சயம் சந்திப்பார் என்றார். இதையடுத்து நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் விஜய பிரபாகரன் பேசுகையில் எனது தந்தை விஜயகாந்த் எவ்வளவோ மக்கள் பணி செய்துவிட்டார். அவர் ஓய்வெடுக்கட்டும். அவர் பணியை செய்வதற்காக நான் வந்துள்ளேன். எனது தோளில் சுமந்து இந்த கட்சியை கொண்டு செல்வேன்.

சிங்கம் சிங்கம்தான்
கேப்டனை என்னதான் தூக்கி எறிந்தாலும் அவர் சுவற்றில் அடித்த பந்து போல் மீண்டும் மக்கள் முன்னால் வந்து நிற்பார். தேமுதிக யாருக்கும் அடிமை இல்லை. அதிமுக 60 சீட்டில் தோற்றதற்கு தேமுதிக கூட்டணியில் இல்லாததே காரணம். குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான். எனது தந்தை எப்போதும் சிங்கம்தான் என்றார். விஜயகாந்தை நம்பிதான் பலர் இந்த கட்சியில் இணைந்தார்கள். ஆனால் தற்போது விஜயகாந்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டு தான் இந்த கட்சியை நடத்துவதாக சொல்வதை தொண்டர்கள் மிகவும் அதிர்ச்சியான சம்பவமாக கருதுகிறார்கள். மேலும் திமுகவில் வாரிசு அரசியல் என விமர்சனம் செய்து விட்டு தற்போது விஜயகாந்திற்கு பிறகு கட்சியை தான் பார்த்துக் கொள்கிறேன் என விஜய பிரபாகரன் கூறியுள்ளது முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications