மணிஷ் திவாரிக்கு வேலை வெட்டி கிடையாது... "புரட்சி" குறித்து வி.கே.சிங் பதிலடி
டெல்லி: ராணுவம் மூலம் டெல்லியை கைப்பற்ற முயன்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி கூறியுள்ள குற்றச்சாட்டை முன்னாள் ராணுவத் தளபதியும், வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான வி.கே.சிங் மறுத்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி நள்ளிரவு ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில முகாம்களில் இருந்து டெல்லியை நோக்கி ராணுவத்தின் 3 பெரிய படைப்பிரிவுகள் சென்றதாகவும், ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கவிழ்க்க அவர்கள் முயற்சித்ததாகவும் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் பிரபல ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியானது.
இந்தத் தகவலால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்தத் தகவலை மறுத்தது.
இந்நிலையில், நேற்று டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து முன்னாள் மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி, ராணுவம் டெல்லியைக் கைப்பற்ற முயற்சித்த சம்பவம் உண்மை தான் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திவாரியின் இந்தப் பேச்சுக்கு முன்னாள் ராணுவ தளபதியும், வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான வி.கே. சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வி.கே.சிங், ‘மணிஷ் திவாரிக்கு தற்போது எந்த வேலைவெட்டியும் கிடையாது. அந்த சம்பவம் தொடர்பாக நான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். அதை படித்துப் பார்த்தால் அவருக்கு எல்லாமே தெளிவாகிவிடும்' எனப் பதிலளித்துள்ளார்.
இப்படிப் பேசியதற்காக காங்கிரஸ் மேலிடமும் திவாரியைக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.