புயல் நிவாரணம்: தார்பாய்கள் திருடியதாக பாஜகவின் சுவேந்து அதிகாரி மீது மே.வங்க போலீஸ் அதிரடி வழக்கு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புயல் நிவாரணப் பொருட்களில் ரூ12 லட்சம் தார்பாய் உள்ளிட்டவை திருடியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் அவரது சகோதரர் சோமேந்து அதிகாரி ஆகியோர் மீது போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் வலது கரமாக இருந்தவர் சுவேந்து அதிகாரி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டியிட்டார்.
நந்திகிராம் தொகுதி
இத்தொகுதியில் மமதா பானர்ஜி முதலில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் திடீரென சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார் என்றது தேர்தல் ஆணையம். இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்தல் முடிவை எதிர்த்து மமதா பானர்ஜி வழக்கும் தொடர்ந்துள்ளார்.
அதிரடி நடவடிக்கைகள்
மேற்கு வங்கத்தில் பாஜகவின் நம்பிக்கை முகமாக இருப்பவர் சுவேந்து அதிகாரி. இந்த நிலையில் சுவேந்து அதிகாரிக்கு எதிராக மேற்கு வங்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தின் கந்தி நகராட்சியின் நிர்வாக உறுப்பினர் ரந்தீப் மன்னா ஒரு புகார் அளித்துள்ளார்.
சுவேந்து அதிகாரி மீது திருட்டு வழக்கு
ரந்தீப் மன்னா அளித்த புகாரில், கந்தி நகராட்சி நிர்வாகத்தில் இருந்த புயல் நிவாரண பொருட்களில் ரூ12 லட்சம் மதிப்பிலான தார்பாய்களை சுவேந்து அதிகாரி மற்றும் அவரது சகோதரர் சோமேந்து அதிகாரி ஆகியோர் உத்தரவின்படி திருடிச் சென்றுவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுவேந்து அதிகாரி, சோமேந்து அதிகாரி ஆகியோர் மீது போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சுவேந்து உதவியாளர் கைது
இதனிடையே கொல்கத்தாவில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக சுவேந்து அதிகாரியின் உதவியாளர் ராகல் பெரா கைது செய்யப்பட்டுள்ளார். சுஜித் தே என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராகல் பெரா நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சுவேந்து அதிகாரிக்கு எதிரான மேற்கு வங்க போலீசாரின் அதிரடி நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.