மே.வங்க 8-ம் கட்டமாக சட்டசபை தேர்தல்: 35 தொகுதிகளில் காலை 9 மணி வரை 16.04% வாக்குகள் பதிவு
கொல்கத்தா: மேற்கு வங்க 8வது மற்றும் இறுதி கட்ட சட்டசபை தேர்தலில் 35 தொகுதிகளில் இன்று காலை 9 மணி வரை மொத்தம் 16.04% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த ஆண்டு தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
35 தொகுதிகளில் வாக்குப் பதிவு
இதுவரை 7 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. இன்று எஞ்சிய 35 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 6.30 மணிவரை நடைபெறும்
17 தொகுதிகளில் நேரடி மோதல்
இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மொத்தம் 11,860 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 35 தொகுதிகளில் 283 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 17 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ்- பாஜக- இடதுசாரி,காங். கூட்டணிகள் நேரடியாக மோதுகின்றன.
பலத்த பாதுகாப்பு
இன்று மொத்தம் 84 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இன்றைய தேர்தலில் வன்முறைகள் நிகழாத வகையில் 641 கம்பெனி மத்திய பாதுகாப்பு படைகள் பாதுகாப்புப் ப்பணியில் ஈடுபட்டுள்ளன.
கொரோனா பரவல் கட்டுப்பாடுகள்
மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிகஅதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி இன்றைய வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி வரை மொத்தம் 16.04% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.