மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம்.. சட்டசபையில் தீர்மானம்.. புதுப் பெயர் எப்படி இருக்கிறது?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின், பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டசபையில் நிறைவேறியுள்ளது.
இந்தியா ஒன்றுபட்ட தேசமாக இருந்தபோது, இப்போதைய வங்கதேச நாடு, கிழக்கே அமைந்திருந்ததால் கிழக்கு வங்கம் எனவும், தற்போதைய மேற்கு வங்க மாநிலம், அப்பெயரிலும் அழைக்கப்பட்டு வந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தான் முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட, தனி நாடாக பிரிக்கப்பட்டது. இப்போதைய வங்கதேச நாட்டு பகுதிகள் பாகிஸ்தானுடன் இருந்தன. 1971இல் கிழக்குப் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று வங்கதேசம் என்ற புது நாடாக உருவானது. இதில் இந்தியாவின் பங்களிப்பும் அதிகம்.
இந்த நிலையில்தான், மேற்கு வங்கம் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வங்காளிகளிடம் எழுந்தது. கிழக்கு வங்கம் என்ற ஒரு மாநிலம் இல்லாத போது மேற்கு வங்கத்திற்கான தேவை என்ன என்ற நியாயமான கோரிக்கை அது.
தற்போது மமதா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி மேற்கு வங்கத்தில் நடந்து வருகிறது. 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, மேற்கு வங்க மாநிலத்திற்கான புதிய பெயரை முன்மொழிந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆங்கிலத்தில் பெங்கால் எனவும், வங்கமொழியில் பங்களா எனவும், ஹிந்தியில் பங்காள் எனவும் மாநிலத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இப்படி 3 மொழிகளில் மாநிலத்தின் பெயரை குறிப்பிடுவது சாத்தியமில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துவிட்டது. இதையடுத்து, திருத்தப்பட்டு புதிய தீர்மானத்தை மேற்கு வங்க சட்டசபையில் இன்று அரசு தாக்கல் செய்தது. இந்த தீர்மானத்தின்படி, 'பங்களா ' என மேற்கு வங்க மாநிலம் அழைக்கப்படும்.
தீர்மானம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், மேற்கு வங்கம் 'பங்களா ' என அன்போடு அழைக்கப்படும்.