விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு புதிய மறுவாழ்வுத் திட்டம்... மே.வங்க அரசு அறிமுகம்
கொல்கத்தா: பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மறுவாழ்விற்காக மேற்கு வங்க மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
முக்திர் அலோ என்ற பெயரிலான அந்தத் திட்டமானது, முற்றிலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் அதிலிருந்து மீண்டு மறுவாழ்வு பெறுவதற்கு வகை செய்யும்.
இந்தத் திட்டத்தின் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அச்சுத் துறை உள்ளிட்டவற்றில் பயிற்சி தரப்படும். 9 மாத பயிற்சியின்போது மாதா மாதம் ரூ. 2500 சம்பளம், இலவச தங்குமிடம், உணவு ஆகியவை வழங்கப்படும்.
இந்த பயிற்சியை பெற்ற பின்னர், அவர்கள் சொந்தமாகவோ, சுய உதவிக் குழு வழியாகவோ தொழில் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதலீட்டு தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த மாதம் இறுதியில் தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து அம்மாநில பெண்கள் நலத்துறை அமைச்சர் சஷி பாஞ்சா கூறுகையில், "தற்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள், அதிலிருந்து மீண்டு கண்ணியமிக்க வாழ்க்கையை தொடங்க விரும்புகின்றனர். அவர்களுக்கான அந்த வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்தி தருவதற்காக புதிய திட்டத்தை தொடங்க இருக்கிறோம்.
இந்த திட்டத்தில், முதல் கட்டமாக சிறுமிகளை நாங்கள் அடையாளம் கண்டு உள்ளோம். அவர்களுடன் பாலியல் தொழிலை விட முன்வரும் பெண்களும் இதில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம், அவர்களுக்கு பயிற்சி அளித்து மற்றும் திறமைகளை அளித்து அதனைக் கொண்டு புதிய வாழ்க்கை ஒன்றை அவர்கள் தொடங்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்" என்றார் அவர்.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 50 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாம்.