நடிகர் ஆமீர் கானும், மோடியும் சந்தித்து எதை பற்றி பேசினார்கள்?
டெல்லி: நடிகர் ஆமீர் கான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதேவில் கவனம் செலுத்திய சமூக பிரச்சனைகளை தீர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத்தில் நர்மதா அணை கட்டுவதை கடுமையாக எதிர்த்தவர் பாலிவுட் நடிகர் ஆமீர் கான். இந்நிலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் திங்கட்கிழமை சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
மோடியை சந்தித்த பிறகு ஆமீர் கான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடிஜியை சந்தித்துவிட்டு தற்போது தான் வெளியே வந்துள்ளேன். அவர் தனது நேரத்தை எனக்காக ஒதுக்கினார். சத்யமேவ ஜெயதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வோட் ஃபார் சேஞ்ச் அதாவது மாற்றத்திற்காக வாக்களியுங்கள் பிரச்சாரத்திற்கு மக்கள் அளித்த அமோக ஆதரவை அவரிடம் தெரிவித்தேன். மேலும் அந்த நிகழ்ச்சியில் கவனிக்கப்பட்ட பல்வேறு சமூகப் பிரச்சனைகள் குறித்தும் அவரிடம் கூறினேன். அனைத்து விஷயங்களையும் பார்ப்பதாக அவர் எனக்கு உறுதியளித்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆமீர் மோடியை சந்தித்து பேசியபோது சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் டிவிடிகள் அடங்கிய பாக்கெட்டை எடுத்துச் சென்றார்.
முன்னதாக போபாலில் கடந்த 16ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆமீர், மக்கள் அதிலும் குறிப்பாக ஏழைகளின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருவதாக மோடி சாஹேப் பேசியுள்ளார். அவர் தனது இலக்கை அடைய நாம் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களும், நானும் மோடி சாஹேபிடம் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டுள்ளோம் என்றார்.