கின்னஸ் சாதனை படைத்த மோடி சூட்.. பட்.. அதை விடவும் பெஸ்ட்டெல்லாம் இருக்கு பாஸ்!
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வந்திருந்த போது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் சூட் ஏலத்தில் விடப்பட்டு அதிக விலைக்கு ஏலம் போனது. இதன் மூலம் அதிக விலையில் ஏலம் எடுக்கப்பட்ட உடை இது என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா வந்திருந்தார். அந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கோட்-சூட்டினை அணிந்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்று மோடியின் பெயரால் வடிவமைக்கப்பட்டிருந்த ஆடை கடந்த பிப்ரவரி மாதம் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரான துல்சிபாய் படேல், 4 கோடியே 31 லட்சத்து 31 ஆயரத்து 311 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இதன் மூலம் உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கோட் சூட் என்ற சாதனையை மோடி அணிந்த உடை படைத்துள்ளது. மோடி சூட் போன்று விலை உயர்ந்த ஆடைகள் உலகில் வேறு என்னென்ன இருக்கின்றன?
மைக்கல் ஜாக்சனின் கையுறை:
ஆடிப்பாடி உலகில் உள்ள எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டவர் மைக்கல் ஜான்சன். அவர் அணிந்த கையுறையை 2.8 கோடிக்கு 2009ல் சீனா நிறுவனம் ஒன்று ஏலத்தில் எடுத்துள்ளது. மிக அதிக விலைக்கு ஏலம் போன கையுறை என்ற சாதனையை மைக்கல் ஜாக்சனின் கையுறை பெற்றுள்ளது. இதுவரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. சீனா கலைப் பொருட்கள் நிறைந்த கேலரியில் இது பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மர்லின் மன்றோவின் ஆடை:
மர்லின் மன்றோ அணிந்த எந்த பொருளை ஏலத்திற்கு விட்டாலும் அது அமோக விலைக்குத்தான் இன்றும் ஏலத்தில் எடுக்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு லாஸ் ஏன்ஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஏலத்தில் மர்லின் மன்றோ "தி செவன் இயர் இட்ச்" என்ற படத்தில் அணிந்திருந்த உடை 30 கோடிக்கு ஏலம் போனது.
அட்ரி ஹெப்பனி சினிமா உடை:
"பிரேக் பாஸ்ட் டிபனிஸ்" என்ற ஆங்கிலப்படத்தில் அட்ரி ஹெப்பன் அணிந்து நடித்த ஆடை 6.2 கோடிக்கு ஏலம் போனது. 1961ம் ஆண்டு வெளியான இந்தச் சினிமாவில் ஹெப்பன் அணிந்திருந்த உடை 2006ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தின் போது இந்த விலைக்கு விற்கப்பட்டது.
83 கோடி ரூபாய்க்கு உள்ளாடை:
விக்டோரியா சிக்ரெட் நிறுவனம் தயாரித்த பெண்கள் அணிந்து கொள்ளும் பிரா 83 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. இதில் வைரம், மரகதம் உள்ளிட்ட விலை உயர்ந்த இழைகள் பதிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது.
இந்தியப் பட்டுப் புடவை:
பட்டுப் புடவை என்றால் தமிழ்நாடுதானே... 39 லட்சத்திற்கு பட்டுப் புடவை ஒன்றை உருவாக்கி உலக சாதனை படைத்தது தமிழகத்தைச் சேர்ந்த சென்னை சில்க்ஸ். 4760 மணி நேர உழைப்பில் வண்ண மயமான பட்டுப் புடவை 2008ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. தங்கம், வைரம், பிளாட்டினம், பவளம், முத்து, மரகதம் ஆகிய விலை உயர்ந்த இழைகளால் இந்தப் பட்டுப் புடவை வடிவமைக்கப்பட்டது.