'ரபேல்' போர் விமான ஒப்பந்தத்தை கைகழுவுகிறது மத்திய அரசு... 'சுகோய்' தயாரிக்க முடிவு?
டெல்லி: பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்திய விமானப் படைக்காக ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி மதிப்பிலான அதிநவீன போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட இருப்பதாக இந்தியாஸ்பெண்ட் இணையதளத்தில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சின், 'டஸ்ஸால்ட்' என்ற விமான தயாரிப்பு நிறுவனத்திடம் 2007ல் அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. எனினும், அதற்குப் பிறகு தங்கள் நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டது.
ரபேல் போர் விமானங்களை விட, ரஷ்யாவின், 'சுகோய் - 30' போர் விமானங்கள் மேலானவை என கருதியதால் அந்த விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. ரபேல் விமான ஒப்பந்தம் முடக்கப்பட்டது. இது குறித்து, டஸ்ஸால்ட் நிறுவனம், இந்திய அரசிடம் கேட்ட போது, விமானங்களின் விலை அதிகமாக இருப்பதால் ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்திய அரசுக்கு எதிராக, பிரான்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அது போல, கடந்த மாதம், பிரான்ஸ் அமைச்சர்கள் இந்தியா வந்து, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து, ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தினர்.
இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் தொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு முதல் டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையை கைவிடப் போவதாக பாதுகாப்புத்தறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சூசகமாக தெரிவித்துள்ளார். ரபேல் விமானங்களுக்கு பதிலாக நாசிக்கில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் மூலம் சுகோய் 30 ரக போர் விமானங்களை கூடுதலாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உற்பத்தி செலவு பாதி:
இந்திய விமானப்படையின் முதுகெழும்பாக விளங்கும், சுகோய் 30 ரக விமானங்கள், இந்தியாவின் அதிநவீன விமானங்களாகும். ரபேல் விமானங்களை ஒப்பிடும் போது, சுகோய் 30 ரக விமானத்தின் உற்பத்தி செலவு அதில் பாதி மட்டுமே. எனினும், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம், சுகோய் போர் விமானங்களை மெதுவாக உற்பத்தி செய்வதால், இந்திய விமானப் படைக்கு அந்த விமானங்கள் அர்ப்பணிக்கப்படுவது தாமதமாகி வருகிறது.
இதனிடையே இந்த விவகாகரம் குறித்து இந்தியாஸ்பென்ட் இணையதளத்திடம் கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரி மன்மோகன் பகதுர், அமைச்சரின் கருத்து உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார்.
மேலும், ‘இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் முன்பு, பல்வேறு செயல்பாட்டு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இரண்டு ரக விமானங்களும் இரு வேறு அம்சங்களை கொண்டது. இரண்டுக்குமே வெவ்வேறு விதமான பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும். இரண்டு சுகோய் விமானங்களின் செயல்திறனை, ஓரு ரபேல் விமானம் ஈடுசெய்யும். எனவே அதற்கு இருமடங்கு பயிற்சி தேவைப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை முதலில் 8 சுகோய் 30கே விமானங்கள் மற்றும் 32 பன் திறன்கொண்ட சுகோய் 30 விமானங்களை ரஷ்யாவிடம் இருந்து கடந்த 1996ம் ஆண்டு வாங்கியது. பின்னர் கடந்த 1998ம் ஆண்டு கூடுதலாக 10 சுகோய் 30 ரக விமானங்களை வாங்கியது.
கடந்த 1996 ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் மூலம் சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்களை ரஷ்ய தொழில்நுட்பத்தில் செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த ஒப்பந்த்தின் படி, 140 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக போர் விமானங்கள், 920 என்ஜின்கள், 140 வகையான விமான உதிரி பாகங்களை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இவை அனைத்தும் 2017 - 18 ஆண்டுக்குள் தயார் செய்து ஒப்படைக்க இந்துஸ்தான் நிறுவனத்திடம் பணி வழங்கப்பட்டது. ஆனால் காம்பாட் விமானங்களின் தொடர் விபத்து காரணமாக சுகோய் ரக விமானங்களை 2014-2015 ஆண்டுக்குள் செய்துதர வேண்டும் என்று கடந்த 2006ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியது.
பின்னர் கூடுதலாக 82 விமானங்களை செய்ய இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்திடம் பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த விமான உற்பத்திக்கு 2002 - 2003 முதல் 2016 - 2017 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மொத்தம் 222 விமானங்கள் தயாரிக்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில், இதுவரை 150 விமாங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விமானங்களை தயார் செய்து ஒப்படைக்க 2019ம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து விமானங்கள் தயாரிக்க தொழிநுட்ப விவரங்கள் தரப்பட்டத்தில் தாமதம் ஏற்படவில்லை என்று தலைமை தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறை:
தற்போது இந்திய விமானப்படையிடம், 42 போர் விமானங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 25 மட்டுமே உள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 25 போர் விமானங்களில் 14 விமானங்கள் மிக் 21 மற்றும் மிக் 27 ரகத்தை சேர்ந்ததாகும். இந்த விமானங்கள் அனைத்து 2015 - 2024 வரையிலான காலகட்டத்துக்குள் ஓய்வு பெறக்கூடியவை. மேலும், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளை சமாளிக்க கூடுதலாக 45 போர் விமானங்கள் தேவை என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனாலேயே ரபேல் ரக விமானங்களை வாங்குவது முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.