"திருடனுக்கு பதில் இன்னொரு திருடன்", இது ராகுல்.. "மனசெல்லாம் நீங்கதான்" இது மோடி.. பரபர உத்தரகாண்ட்
பாஜகவை பிரச்சாரத்தில் சரமாரியாக விமர்சித்தார் ராகுல்காந்தி
டேராடூன்: சட்டசபை தேர்தலுக்கான தேதி நெருங்கி கொண்டிருக்கையில், பிரச்சாரங்கள் அனல் பறந்து வரும் நிலையில், உத்தரகாண்ட்டை வெல்லபோவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உத்தரகாண்டில் 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.. கடந்த முறை 57 இடங்களை கைப்பற்றி மெஜாரிட்டியுன் பாஜக ஆட்சியை பிடித்தது.
அதனால் இந்த முறையும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் பாஜகவும், இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றன...
உத்தரகாண்ட்
முக்கியமாக பிரியங்கா காந்தி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.. நிறைய வியூகங்களையும் வகுத்து வருகிறார்.. இன்னும் சொல்லப்போனால், உத்தரபிரதேசத்தைவிட, உத்தரகாண்டில்தான் காங்கிரஸ் பாஜகவுக்கு நேரடி போட்டி தரும் என்று சொல்கிறார்கள்.. உபியில் அகிலேஷ் வேகம் எடுத்துவிடவும், அங்கு காங்கிரஸால் முன்னேற முடியவில்லை.. அதனால் பாஜகவுக்கு இணையான ஆதரவு உள்ள உத்தரகாண்ட்டிலேயே தன்னுடைய பிரச்சாரத்தையும் அதிகப்படுத்தி உள்ளது.
கோஷ்டி பூசல்
இதனால் இந்த கட்சிகளிலுமே கோஷ்டி பூசல், கட்சித் தாவல்கள் சரளமாக நடந்து கொண்டிருக்கின்றன.. இதில் பாஜக மீதான குறைகளை லிஸ்ட் எடுத்து மக்களிடம் கொண்டு போயுள்ளது காங்கிரஸ்.. பாஜக ஆட்சியில் இருந்தாலும் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சிக்கல்கள், தொற்றை முறையாக சமாளிக்கவில்லை போன்றவைகளை விலாவரியாக பேச ஆரம்பித்துவிட்டது... இதுபோக பாஜகவின் உட்கட்சி பூசலையும் பொதுவெளியில் பேச ஆரம்பித்துவிட்டது.
ராகுல் காந்தி
இப்போது ராகுலும் களத்தில் குதித்துவிட்டார்.. பாஜகவை தாக்கி கடுமையாக பேசி கொண்டிருக்கிறார்.. சமீபத்தில் பிரதமர் மோடி ஒரு பேட்டியில், நாடாளுமன்றத்தில் முக்கிய விவகாரங்களில் மத்திய அமைச்சர்கள் விரிவான விளக்கங்கள் தருகிறார்கள்.. ஆனால் ராகுல் மட்டும் அவையில் உட்காருவதும் இல்லை.. அப்படியே அவையில் இருந்தாலும் அமைச்சர்களின் பதிலை கேட்பதும் இல்லை... இப்படிப்பட்ட சூழலில் நான் எப்படி அவருக்கு பதிலளிப்பது?" என்று கிண்டலடித்திருந்தார்.
திருடன்
இதற்கு தான் ராகுல் இப்போது பதிலடி தந்துள்ளார்.. உத்தரகாண்ட் கூட்டத்தில் ராகுல் பேசும்போது, பிரதமர் மோடியை பார்த்து நான் ஒன்றும் நான் பயப்படவில்லை... அவரது திமிரை பார்த்தால் எனக்கு சிரிப்புன் வருகிறது.. பிரதமரின் அமலாக்க இயக்குநரகம், சிபிஐ இப்படி எதுவுமே என்னை பயமுறுத்த முடியாது.. நான் ஏன் அவர் பேச்சை கேட்கணும்? உத்தரகாண்டில் பாஜக ஏன் முதல்வர்களை மாற்றியது? அவர்கள் ஊழல்வாதிகள் என்பதால் மாற்றியது... அதாவது ஒரு திருடனுக்கு பதில் இன்னொரு திருடனை கொண்டு வந்திருக்கிறது.. அவ்வளவுதான்" என்றார்.
கருத்து கணிப்பு
இப்படி காங்கிரஸ் ஒருபக்கம் வெளுத்து வாங்கி கொண்டிருந்தாலும், பாஜக தான் இந்த முறையும் அமோக வெற்றி பெறும் என்று கணிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.. உத்தரகாண்ட்டில் பாஜக 31-37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30-36 இடங்களிலும், ஆம் ஆத்மி 2 முதல் 4 இடங்களை கைப்பற்றும் என்றும் சமீபத்தில் ஏபிசி கருத்துக் கணிப்பு கூறியிருந்தது.. அதேபோல, ரிபப்ளிக் டிவி நடத்திய கணிப்புலும், பாஜக 36 முதல் 42 இடங்களும், காங்கிரஸ் 25-31 இடங்களும், ஆத்மி 0-2 இடங்களும் கைப்பற்ற கூடுமென்று தெரிவித்திருந்தது.
வாக்கு சதவீதம்
இப்போது, இந்தியா நியூஸ் ஜன்கி பாத் என்ற செய்தி நிறுவனமும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது... அதில் பாஜக, 34-39 தொகுதிகளும், காங்கிரஸ் 27-33 தொகுதிகளும் கைப்பற்றும் என்றும், பாஜகவுக்கு 40 சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 32 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் அக்கணிப்பு கூறியுள்ளது... இது பாஜகவை மேலும் குஷியாக்கி உள்ளது.
பிரதமர் பேச்சு
அதுமட்டுமல்ல, "நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் நம்மை பின்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறார்கள்... இங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி விஷத்தை விதைத்துள்ளது... இந்த மாநிலத்தை அவர்கள் ஒரு பொருட்டாககூட மதிக்காமல், ஓய்வெடுக்கும் இடமாக பயன்படுத்தி வந்தார்கள்.. சுற்றுலாத்தலமாக மாற்றவும், ஆன்மிகத்தலமாக மாற்றவும் காங்கிரஸ் கட்சி யோசித்ததே இல்லை.. உத்தரகாண்ட் மாநில மக்களுக்கு என்னுடைய மனதில் மிகப்பெரிய இடம் உள்ளது'' என்று பிரதமர் மோடியின் பிரச்சாரமும் மக்களை ஈர்த்துள்ளது..
கெஜ்ரிவால்
இந்த இரு கட்சிகளுக்கு நடுவில் ஆம் ஆத்மி சத்தமில்லாமல் வேலையை காட்டி கொண்டிருக்கிறது.. உத்தரகாண்ட் மாநிலத்திலும் அக்கட்சி கால்பதிக்க தொடங்கியுள்ளது... புதிய வரவு என்றாலும், காங்கிரஸ் மற்றும் பாஜக வின் வாக்குகளை ஆம் ஆத்மி வெகுவாக பிரிக்கும் என்றும் கூறப்படுகிறது... அதாவது காங்கிரஸ் பாஜக 2 கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் என்பது மிக குறைவாக இருக்கும் என்பதால் ஆம் ஆத்மியின் வெற்றிதான் இம்மாநில தோல்வியை தீர்மானிக்கும் கட்சியாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. பார்ப்போம்..!