கேரளாவில் பாஜகவின் முகமாக இருப்பதால் மாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பரிசு!
கேரளாவில் பாஜகவுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்ததால் மாதா அமிர்தானந்தம்யிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தந்துள்ள்து மத்திய அரசு.
திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜக காலூன்றுவதற்கு கை கொடுத்ததால் நன்றிக் கடனாக மாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது மத்திய அரசு.
தமிழகத்திலும் கேரளாவிலும் பாஜக காலூன்றிவிடுவதற்கு படாத பாடுபட்டது. கேரளா உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக அதிரடி ப்ளானெல்லாம் போட்டது பாஜக.
ஈழவா சமூகம்
இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இருந்து வரும் ஈழவா சமூகத்தின் வெள்ளாபள்ளி நடேசனை வளைத்துப் போட்டது. அவரது மகனுக்கு ராஜ்யசபா சீட் தரப்படும் என வாக்குறுதியும் கொடுத்தது.
அமிர்தானந்த மயி
இதையடுத்து தனிக்கட்சி தொடங்கினார் வெள்ளாபள்ளி நடேசன். பாஜகவின் இந்த பலே பிளானுக்கு பக்க பலமாக இருந்தவரே மாதா அமிர்தானந்த மயிதான். 2015-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அப்போதைய ஆளும் காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது பாஜக.
முதல் எம்.எல்.ஏ.
இதற்கு காரணமே அமிர்தானந்த மயி சீடர்களின் 'தேர்தல்' வேலைகள்தான். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலிலும் அமிர்தானந்த மயி சீடர்கள் 'தீயாக' வேலைபார்த்தனர். இதனால் பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ. கிடைத்து முதல் முறையாக அம்மாநில சட்டசபைக்குள் காலடி வைத்தது.
இசட் பாதுகாப்பு
இத்தகைய 'திரு'ப்பணிகளுக்கு நன்றிக் கடனாகத்தான் இப்போது மாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது மத்திய அரசு. ஏற்கனவே ராம்தேவ்.. இப்போது அமிர்தானந்த மயி.. இன்னும் எத்தனை பேருக்கு இசட் பாதுகாப்பு கிடைக்குமோ?