சிறையில் 'அம்மா' ஏன் சீருடை அணியவில்லை?: கர்நாடக சிறைத் துறை பதில்
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையில் ஏன் சீருடை அணியவில்லை என்று கேட்டு பெங்களூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பதிலும் பெற்றுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு வெளியில் இருந்து வாங்கி வந்த உணவு அளிக்கப்பட்டதுடன், அவர் பிற பெண் கைதிகளை போன்று சீருடை அணியவில்லை.
இந்நிலையில் இது குறித்து பெங்களூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கர்நாடக சிறைத்துறையிடம் 5 கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு சிறைத் துறை அனுப்பிய பதிலில் கூறப்பட்டிருப்பதாவது,
கேள்வி: தண்டனை விதிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா எந்த தேதி மற்றும் நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்?
பதில்: 27.9.2014 மாலை 6:00 மணி கைதி எண்: 7402
கேள்வி: சிறையில் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டன?
பதில்: ஜெயலலிதா தண்டனை கைதியாக சிறைக்குள் வந்ததில் இருந்து வெளியே செல்லும் வரை அவருக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை.
கேள்வி: சிறையில் இருக்கையில் ஜெயலலலிதா எத்தனை பேரை சந்தித்து பேசினார்? அவர்களின் பதவிகள் என்ன? அவர்கள் வழக்கறிஞர்களா? உறவினர்களா? நலம் விரும்பிகளா? அதிகாரிகளா? அமைச்சர்களா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
பதில்: ஜெயலலிதா யாரையுமே சந்திக்கவில்லை.
கேள்வி: ஜெயலலிதா எந்தெந்த அதிகாரிகளின் மேற்பார்வையில் இருந்தார்?
பதில்: அவர் பெண் என்பதால் பெண்களுக்கான பிரிவில் அடைக்கப்பட்டார். அவர் பெண் எஸ்.பி., பெண் ஜெயிலர், பெண் பாதுகாப்பு அதிகாரி, பெண் தலைமை வார்டன் மற்றும் சிறைத் துறை இயக்குநர் ஆகியோரின் மேற்பார்வையில் இருந்தார்.
கேள்வி: தண்டனை கைதிகளுக்கு சிறைத் துறை விதிப்படி சீருடை வழங்க வேண்டும். அவ்வாறு சீருடை வழங்கவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்?
பதில்: கர்நாடக சிறைத் துறை 350 விதியின்படி தண்டனை கைதிக்கு சீருடைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் அளிக்க வேண்டும். சாதாரண கைதிகள் சீருடை அணிய வேண்டிய தேவை இல்லை. கொடூரமான தண்டனை கைதிகளே சீருடை அணிய வேண்டும். ஜெயலலிதா சாதாரண கைதி என்பதால் அவர் வெள்ளைச் சீருடையை அணியவில்லை.