சி.பி.எம். பொதுச்செயலராக யெச்சூரி... வரிந்து கட்டி ஆதரித்த மேற்கு வங்கம், திரிபுரா தலைவர்கள்!
விசாகப்பட்டினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரியை தேர்வு செய்ய மேற்கு வங்கம், திரிபுரா மாநிலத் தலைவர்கள்தான் தீவிரமாக ஆதரவு தெரிவித்தனர். ஆனால் கேரளா தலைவர்களும் பிரகாஷ் காரத்தும் ராமச்சந்திர பிள்ளையை முன்னிறுத்தினர். இருப்பினும் ராமச்சந்திர பிள்ளை கடைசி நேரத்தில் விலகிக் கொண்டதால் ஒருமனதாக யெச்சூரி தேர்வானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநாடு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கடந்த் 18-ந் தேதி புதிய பொதுச்செயலாளர் தேர்வும் நடைபெற்றது.
யெச்சூரிக்கு மே.வங்கம், திரிபுரா ஆதரவு
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிய பிரகாஷ் காரத், கேரளா தலைவர்கள் அனைவரும் 77 வயதான ராமச்சந்திர பிள்ளையை முன்னிறுத்தினர். அதே நேரத்தில் மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநில தலைவர்களோ யெச்சூரிதான் சரியான தேர்வு என வாதாடினர்.
பிள்ளைக்கு பெருகிய ஆதரவு
ஒருகட்டத்தில் ராமச்சந்திர பிள்ளைக்கு பிருந்தா காரத், பினராய் விஜயன், கொடியேறி பாலகிருஷ்ணன், எம்.ஏ. பேபி, கே. வரதராசன், ஏ.கே. பத்மநாபன், ராகவலு என பல தலைவர்களும் ராமச்சந்திர பிள்ளையை ஆதரித்தனர். பிமன் போஸ், சூரிய காந்த மிஸ்ரா, திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் என சிலர்தான் யெச்சூரியை ஆதரித்தனர்.
விலகிய பிள்ளை
இருப்பினும் புத்ததேவ் பட்டாச்சார்யா, நிருபம் சென் ஆகியோர் யெச்சூரியை ஆதரிக்காமல் ராமச்சந்திர பிள்ளைக்கு ஆதரவு அளித்தனர். இருப்பினும் வயது, சரளமாக இந்தி பேச முடியாது போன்ற காரணங்களால் ராமச்சந்திர பிள்ளை ஒதுங்கிக் கொள்வதாக கூற வேறு வழியில்லாமல் கேரளா தலைவர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.
தேர்தல் நடக்கலையே..
இதனால் ஒருமனதாக சீதாராம் யெச்சூரியே தேர்வு செய்யப்பட்டார். ஒருவேளை பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றிருந்தால் கட்சியில் உள்ள கருத்து வேறுபாடுகளை அம்பலத்துக்கு கொண்டு வந்திருக்கும் என்பது மூத்த தலைவர்களின் கருத்தாக இருக்கிறது.
வாழ்த்துகள் காம்ரேட்!