ரவிசங்கர் பிரசாத் இலாகா பறிப்புக்கு காரணம் ஜெ.வுடனான சந்திப்பா?
டெல்லி: மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் இலாகா மாற்றத்துக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்புதான் காரணம் என்றும் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமிதான் இந்த இலாகா மாற்றத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த ஞாயிறன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அத்துடன் சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன.
சட்டம், நீதித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்திடம் இருந்து சட்டம், நீதித்துறை பறிக்கப்பட்டது. அவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மட்டும் இருக்கிறார்.
ரயில்வே அமைச்சராக இருந்த சதானந்த கவுடா, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். ரவிசங்கர் பிரசாத்தின் இலாகா பறிப்புக்கு அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
அதாவது ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக செப்டம்பர் 20-ந் தேதியன்று ஜெயலலிதாவை ரவிசங்கர் பிரசாத் சந்தித்து பேசினார்.
இதற்கு அப்போதே சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவுடனான ரவிசங்கர் பிரசாத்தின் சந்திப்பால் ஊழல்வாதிகளை நாம் காப்பாற்றுகிறோமா என்ற சந்தேகம் பொதுமக்களிடத்தில் எழுந்துள்ளதாக நரேந்திர மோடியிடம் சுப்பிரமணியன் சுவாமி புகாரும் தெரிவித்திருக்கிறார்.
இதனால் ரவிசங்கர் பிரசாத் மீது அதிருப்தி அடைந்திருந்த பிரதமர் மோடி, அமைச்சரவை மாற்றத்தின் போது அவரது வசம் இருந்த சட்டம், நீதி துறைகளை பறித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் நீதித்துறையில் கர்நாடகாவைச் சேர்ந்த பலரும் முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் கர்நாடகாவைச் சேர்ந்த சதானந்தா கவுடாவுக்கு சட்டம், நீதித்துறை ஒதுக்கப்பட்டதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.