சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தினசரி 10ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பார்களா?
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினசரியும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சபரிமலை: ஐயப்பனை தரிசனம் செய்ய தினசரியும் 10ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு, தேவசம்போர்டு தலைவர் வாசு கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் பினரயி விஜயனுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார் கடகம்பள்ளி சுரேந்திரன்.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 16ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 12 ஆயிரம் பக்தர்கள் கூட தரிசனம் செய்யவில்லை.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் பக்தர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வரக்கூடிய காலத்தில், தினமும் 1000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கோவிலுக்கு வரும் வருமானமும் குறைந்து விட்டது. எனவே கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தனித்தீவான முடிச்சூர்.. தரை தளம் வரை சூழ்ந்த வெள்ள நீர்.. 2015 வெள்ள பாதிப்பின் ஜெராக்ஸ்!
சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு, தேவசம்போர்டு தலைவர் வாசு கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் , சபரிமலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார். சாமானிய பக்தர்களுக்கு சபரிமலைவாசன் ஐயப்பனின் தரிசனம் கிடைக்குமா? பார்க்கலாம்.