ஆங்கிலத்தால் இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகள் அழியுமா?.. பரபர ஆய்வு
டெல்லி: காலப் போக்கில் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்தியாவின் 8 முக்கிய மொழிகள் (இதில் தமிழ் இடம் பெறவில்லை) அழிந்து விடும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்று மொழியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஆங்கிலத்தால் ஆபத்து ஏற்படப் போவதாக கூறப்படும் மொழிகளில் இந்தி, பெங்காலி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி ஆகிய இந்திய மொழிகள் உள்ளன. இவை இந்தியாவின் முக்கிய மொழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் மொத்தம் 30 மொழிகளுக்கு ஆங்கிலத்தால் ஆபத்து இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
இருப்பினும் இதற்கான வாய்ப்பு குறைவு என்று இந்திய மக்கள் மொழியியல் ஆய்வு கழகத்தின் தலைவர் கணேஷ் என். தேவி கூறியுள்ளார். இந்த மொழிகள் வளருமே தவிர அழியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 ஆண்டுகளில் 4000 மொழிகள் அழியும்
தேவி மேலும் கூறுகையில் உலக அளவில் அடுத்த 50 ஆண்டுகளில் 4000 மொழிகள் அழியும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 10 சதவீத மொழிகள் இந்தியாவில் பேசப்படும் மொழிகள் ஆகும்.

மீனவர்கள் இடப்பெயர்ச்சி
கடலோரங்களில் வசிக்கும் மீனவ சமுதாயத்தினர் வேறு இடங்களுக்கு இடம் பெயருவதும், மீன் பிடி தொழில் நசிந்து வருவதும், மீனவர்கள் நகர்களுக்குள் இடம் பெயர ஆரம்பித்திருப்பதும் அவர்கள் பேசி வரும் மொழியின் அழிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

வளரும் மொழிகள்
அதேசமயம், சில மொழிகள் வளர்ச்சிப் பாதையில் உள்ளன என்பது மகிழ்ச்சி தருகிறது. உதாரணத்திற்கு ஒடிஷா, சட்டிஸ்கர், மகாராஷ்டிராவில் பேசப்படும் சம்தாலி, கோண்டி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத்தில் பேசப்படும் பேலி, மிஸோ, கரோ, காசி, கோட்பாரக் ஆகிய மொழிகள் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளன.

போஜ்பூரி
அதேபோல நாட்டிலேயே வேகமாக வளரும் மொழியாக போஜ்புரி உருவெடுத்துள்ளது. இந்த மொழியில் வெளியாகும் திரைப்படங்கள்தான் போஜ்புரி வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.

ஆங்கிலத்தால் மலையாளம், கன்னடம் அழியுமா?
இந்தியாவின் முக்கிய மொழிகளான பெங்காலி, இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகள் ஆங்கிலத்தால் அழியும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இருப்பினும் அதற்கான வாய்ப்பு குறைவு என்பது எனது கருத்தாகும். இந்த மொழிகள் பல ஆயிரம் வருடங்களாக பேசப்பட்டு வருபவை ஆகும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications