லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை
டெல்லி: லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
நாடு முழுவதும் உள்ள சுங்க கட்டண முறையை ரத்து செய்வது, ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வருவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் லாரி உரிமையாளர்கள் கடந்த 1ம் தேதியில் இருந்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுங்க கட்டண முறையை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்நிலையில் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கட்காரியின் கோரிக்கையை ஏற்க லாரி உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர்.
மேலும் மத்திய போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை செயலாளர் விஜய் சிப்பர் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
4 நாட்களாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொருட்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தால் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடியும், மத்திய அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் கட்காரி இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
லாரிகள் வேலைநிறுத்தத்தால் நாமக்கல் மாவட்டத்தில் 3.5 கோடி முட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கீரம்பூர் சுங்கச்சாவடியை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட சென்ற 200க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் நல்லதம்பி உள்ளிட்டோர் சுங்கச்சாவடி மேலாளர் செந்திலிடம் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துவிட்டு சென்றனர்.