மலேசியாவில் நின்று கொண்டு தமிழகத்தைப் பாராட்டிய மோடி... இந்தியாவுக்கு உதவுமா?
டெல்லி: கிட்டத்தட்ட ஒரு "சேல்ஸ் ரெப்" போலத்தான் மலேசிய பயணத்தில் பேசி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இது இந்தியாவுக்கு எந்த அளவுக்குப் பயன்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதை விட மலேசியாவில் போய் நின்று கொண்டு தமிழகத்தைப் பாராட்டிப் பேசிய அவரது பேச்சு மலேசியத் தமிழர்களை எந்த அளவுக்கு கவர்ந்திழுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு மகத்தானது, பெரிதானது.. இது மோடி கோலாலம்பூரில் நேற்று மலேசிய வாழ் இந்தியர்கள் மத்தியில் (பெரும்பாலானோர் தமிழர்களே) ஆற்றிய உரையில் முதலில் குறிப்பிட்ட வார்த்தை. வணக்கம் என்று சொல்லி ஆரம்பித்த அவர் தொடக்க வரிகள் சிலவற்றை தமிழிலேயே பேசினார். அதில் ஒன்றுதான் இந்தப் பாராட்டு.
மோடியின் இந்தப் பாராட்டுக்கு மலேசிய தமிழர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கைத்தட்டல் காதைப் பிளந்தது. மலேசியத் தமிழர்களைக் குறி வைத்து மோடி தனது பேச்சை தொடர்ந்தார். இடையே திருவள்ளுவரையும், திருக்குறளையும் தனது பேச்சின் ஊடாக செருகி தமிழர்களை சென்டிமென்ட்டாக டச் செய்தார் மோடி.
மலேசியாவில் மோடி
பிரதமர் மோடி நவம்பர் 21ம் தேதி மலேசிய பயணத்தைத் தொடங்கினார். மலேசியாவில் அவர் இந்தியாவில் விரிந்து பரந்திருக்கும் வாய்ப்புகள் குறித்து விவரித்து இந்தியாவை நோக்கி வாருங்கள் என்று மலேசிய முதலீட்டாளர்களை இரு கரம் கூப்பி அழைத்துள்ளார்.
சேல்ஸ்மேன் போல
எப்படி ஒரு நிறுவனத்தின் சேல்ஸ் ரெப், தனது நிறுவனத்தின் சாதகங்களையும், லாபங்களையும் கூறி பிசினஸை வரவேற்க முயற்சிப்பாரோ அதேபோலத்தான் பேசி செயல்பட்டு வருகிறார் மோடியும்.
ஆசியான் கூட்டத்தில்
இரண்டு முக்கியக் கூட்டங்களில் மோடி இந்தியாவின் வாய்ப்புகள் குறித்து விளக்கிப் பேசினார். 13வது இந்தியா - ஆசியான் மாநாடு மற்றும் ஆசியான் வர்த்தக முதலீட்டு மாநாடு ஆகியவற்றில் அவர் இந்தியாவில் வர்த்தக வாய்ப்புகள் குறித்தும், இந்தியா, ஆசியான் நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்தும் விரிவாகப் பேசினார்.
மாறிப் போச்சு
ஆசியான் முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மோடி பேசுகையில், இந்தியாவில் மாற்றம் வந்து விட்டது. காற்று மாறி வீசுகிறது. இதுதான் நீங்கள் இந்தியாவை நோக்கி டேக் ஆப் ஆக சரியான சமயம். அனைவரும் வாருங்கள். நீங்கள் வரும்போது அங்கு உங்களுக்கேற்ற சூழல் நிலவும் என்று நான் உறுதியளிக்கஇறேன் என்றார் மோடி.
சாதனைப் பட்டியல்
அத்தோடு நில்லாத மோடி, தனது அரசு பதவியேற்ற பிறகு செய்த சாதனைகளையும் அங்கு பட்டியலிட்டார். ஜிடிபி வளர்ச்சி அதிகரிப்பு, பணவீக்கம் குறைவு, வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு, வரி வருவாய் அதிகரிப்பு, வட்டி விகிதம் குறைவு, நிதிப் பற்றாக்குறை குறைவு, ரூபாய் மதிப்பு நிலைத்தன்மை ஆகியவற்றை அவர் சாதனைகளாக குறிப்பிட்டார்.
தனியார் முதலீடுகள்
தனியார் முதலீடுகள் இந்தியாவில் அதிகரிப்பதையும் முக்கியமாக குறிப்பிட்டுச் சொன்னார் மோடி. மேலும் உலக அளவில் அதிக முதலீட்டாளர்கள் விரும்பும் நாடாக இந்தியா திகழ்வதையும் அவர் எடுத்துரைத்தார்.
கவர்ச்சி அம்சங்களை
சேல்ஸ்மேன் எப்படி கவர்ச்சிகரமாக பேசி நயந்து பேசி வாடிக்கையாளர்களை கவர முயற்சிப்பாரோ அதேபோலத்தான் மோடியின் பேச்சும் இருந்தது. அதிலும் அவர் தமிழர்களை அதிக அளவில் குறி வைத்துள்ளதும் தெரிய வந்தது.
தமிழர்களே தமிழர்களே
மலேசிய வாழ் இந்தியர்களை நேற்றைய பேச்சின்போது வெகுவாக புகழ்ந்து பேசினார் மோடி. மேலும் தமிழகத்தையும் அவர் புகழ்ந்து பேசினார். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு பெரிது என்று தமிழிலேயே அவர் சொன்னபோது தமிழர்கள் ஆச்சரியப்பட்டனர்.
முதல்ல வெள்ளத்துக்கு என்னப் பண்ணப் போறார்!
மோடியின் இந்தப் பேச்சு எந்த அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கும், தொழில்துறைக்கும் உபயோகப்படப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்கு முன்பு தமிழக வெள்ள பாதிப்புக்கு மோடி என்ன செய்யப் போகிறார் என்பதையும் கவனித்தாக வேண்டும்.