தனி அந்தஸ்துக்காக போராடும் ஆந்திர எம்பிகள்... காவிரிக்காக தமிழக எம்பிகள் என்ன செய்யப்போகிறார்கள்?
டெல்லி: ஆந்திராவிற்கு தனி அந்தஸ்து கோரி ஆந்திர எம்பிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தமிழக எம்பிகளும் போராட்டங்கள் நடத்தி பிரதமரின் கவனத்தை ஈர்ப்பார்களா?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டமானது இன்று தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ. 11 ஆயிரம் கோடி மோசடியாக பணம் பெற்றுவிட்டு வெளிநாடு தப்பிவிட்டார். ஜனவரி மாதமே வங்கியை மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
ஆனால் பிப்ரவரி மாதத்தில் தான் இந்த மோசடியானது வெளிவந்தது. பாஜகவின் துணையோடே நீரவ்மோடி வெளிநாடு தப்பியுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தில் இது குறித்து பிரச்னையை கிளப்ப தேசிய கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதன்படி இன்று நாடாளுமன்றம் கூடியதும் இந்தப் பிரச்னை புயலை கிளப்பியதால் லோக்சபா, ராஜ்யசபா உள்ளிட்ட இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆந்திர மாநில எம்பிகள் தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற கட்டிடம் முன்னர் அமைந்திருக்கும் காந்தி சிலையின் முன்பு ஆந்திர எம்பிகள் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தின் போது தொடர் போராட்டத்தில் ஆந்திர எம்பிகள் ஈடுபட்டனர்.
ஆந்திர எம்பிகள் தங்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். இதே போன்று தமிழக எம்பிகளும் காவிரி விவகாரத்தில் தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை பட்ஜெட் கூட்டத்தில் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டுவார்களா?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியதாக தெரியவில்லை. மத்திய அமைச்சர்கள் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளனர்.
தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அனைத்துக்கட்சியினர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் பிரதமர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையான காவிரி பற்றி எம்பிகள் குரல் எழுப்ப வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.