சீனத்துச் செருக்கை அடக்க வடகிழக்கு எல்லையில் ஆகாஷ்.. !
டெல்லி: சீனாவின் அட்டகாசத்தை மனதில் கொண்டு வட கிழக்கு எல்லையில் ஆகாஷ் ஏவுகணைகளை ராணுவம் நிறுத்தி வருகிறது.
ஏற்கனவே தேஸ்பூர், சபுவா ஆகிய இடங்களில் சுகோய் 30எம்கேஐ போர் விமானங்களை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது வட கிழக்கு மாநிலங்களில் ஆறு ஆகாஷ் ஏவுகணைப் பிரிவுகளை அது நிறுத்தியுள்ளது.
தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய ஏவுகணைகள் இவை. சீன போர் விமானங்கள் அத்துமீறினால் பதிலடி கொடுக்கும் வகையில் இவை நிறுத்தப்படுகின்றன.
ஆகாஷ்
அனைத்து விதமான கால நிலையிலிலும் செயல்படக் கூடியவை இந்த ஆகாஷ் ஏவுகணைகள் இருந்த இடத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரம் வரை இலக்கை இடைமறித்துத் தாக்கும் வல்லமை பெற்றவை.
குவாலியர்- புனே
ஏற்கனவே குவாலியரில் உள்ள மிராஜ் 2000 விமானப்படைத் தளத்தில் 2 ஆகாஷ் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் புனேயில் உள்ள சகோய் தளத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது வடகிழக்கு மாநில பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 6 பிரிவுகள் அங்கு நிறுத்தப்படுகின்றன.
மைத்ரி ரத்து
இந்தியாவின் டிஆர்டிஓ வடிவமைத்து, பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்த ஏவுகணையாகும் இது. ஆகாஷ் சிறப்பாக செயல்படுவதால் ரூ. 30,000 கோடியில் பிரான்ஸுடன் இணைந்து தயாரிக்கத் திட்டமிட்டிருந்த மைத்ரி ஏவுகணைத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து விட்டது.
பதிலடி தரப்படும்
இந்தியப் பெருங்கடலில் ஏற்கனவே சீனக் கடற்படைக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் கடற்படை ஓரளவு வலுவாகவே உள்ளது. தற்போது விமானப்படையும் வட கிழக்கு மாநிலங்களில் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ராணுவ ரீதியாகத்தான் இந்தியா இன்னும் குறிப்பிடத்தக்க வலிமையுடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.