வாட்ஸ்அப், பேஸ்புக் பார்க்க கட்டுப்பாடு விதித்த கணவரை அடித்து கொன்ற பெங்களூர் பெண்!
பெங்களூர்: வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த சாப்ட்வேர் இன்ஜினியரை கொலை செய்த அவரின் மனைவி செல்போன் நெட்வொர்க் உதவியால் போலீசில் சிக்கியுள்ளார்.
பெங்களூர் பானசவாடியில் மனைவி ஷில்பாவுடன் வசித்தவர் கேசவ் ரெட்டி. லாங்க்போர்ட் டவுனிலுள்ள Actiance India Limited என்ற நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியாகும்.
ஏரியில் சடலம்
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலார் மாவட்டம் சீனிவாசபூர் ஏரியில் கேசவ் ரெட்டி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது ஐடி கார்டை வைத்து, போலீசார் அடையாளம் கண்டு கொண்டனர். கேசவ் ரெட்டியின் தலையில் இரும்பு ஆயுதத்தால் தாக்கிய காயத் தழும்பு இருந்தது. கேசவ் ரெட்டியின் சகோதரர், திருமலா இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
போன் போட்ட மனைவி
போலீசாரிடம் திருமலா அளித்த ஒரு தகவல், இந்த வழக்கில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. அது என்னவென்றால், தனது சகோதரன் மனைவி ஷில்பா, ஞாயிற்றுக்கிழமை காலை தனக்கு போன் செய்து, கேசவ்ரெட்டி, சொந்த ஊரான மதனபள்ளி செல்வதாக கூறிச் சென்றதாகவும், ஆனால் இதுவரை அவரிடமிருந்து போன் வரவில்லை என்றும் தன்னிடம் கூறியதாக திருமலா தெரிவித்தார்.
சந்தேகமா இருக்குதே
மேலும், இதற்கு முன்பு எத்தனையோ முறை கேசவ் ரெட்டி சொந்த ஊர் வந்தபோதெல்லாம் ஷில்பா தனக்கு போன் செய்தது இல்லை என்றும், ஒருவேளை சொந்த ஊர் வந்தால், கேசவ்ரெட்டி அதுகுறித்து முன்கூட்டியே பெற்றோரிடம் கூறிவிட்டுதான் வருவார் என்றும், இம்முறை இவை அனைத்துமே வித்தியாசமாக உள்ளதாகவும் திருமலா கூறினார்.
செல்போன் எண்ணால் சிக்கினார்
இதையடுத்து, போலீசாரின் சந்தேகம், ஷில்பா மீது திரும்பியது. இதையடுத்து ஷில்பாவின் செல்போன் என்னை பெற்ற போலீசார், அந்த செல்போன் எங்கெல்லாம் பயணப்பட்டுள்ளது என்பதை நெட்வொர்க் சேவை நிறுவன உதவியுடன் கண்டறிந்தனர். அப்போது, சனிக்கிழமை இரவு, சீனிவாசபூர் ஏரி பகுதியில் ஷில்பா செல்போன் டவர் காண்பித்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஷில்பாவிடம் துருவி துருவி போலீசார் விசாரித்தனர்.
தூக்க மாத்திரை
போலீசாரிடம் ஷில்பா அளித்த வாக்குமூலம்: சனிக்கிழமை இரவு எனது கணவருக்கு ஜூஸ் கொடுத்தேன். அதில் அதிக தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தேன். கணவர் தூங்கியதும், இரும்பு கம்பியால் தலையில் ஓங்கி அடித்து அவரை கொலை செய்தேன். எனது அத்தை மகன், வாசுதேவ் உதவியுடன் சடலத்தை சீனிவாசபூர் ஏரியில் கொண்டு சென்று போட்டோம். இவ்வாறு தனது வாக்குமூலத்தில் ஷில்பா கூறியுள்ளார்.
கள்ளக்காதலா?
இந்த கொலையை மறைக்க, ஷில்பாவின் பெற்றோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. கொலையான கேசவ்ரெட்டி உறவினர்கள், இது கள்ளக்காதலால் வந்த வினை என்று போலீசாரிடம் கூறுகின்றனர். வாசுதேவை கல்யாணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆக திட்டமிட்டு ஷில்பா கணவரை கொலை செய்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
சமூக வலைத்தளம்
ஆனால், ஷில்பாவோ, தனது கணவர், கேசவ்ரெட்டி, தன்னை வேலைக்காரி போல நடத்தியதாகவும், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்த கட்டுப்பாடு விதித்ததாகவும், எனவேதான் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். இரு கோணங்களிலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.