நன்கு படியுங்கள், நன்றாக விளையாடுங்கள், கடுமையாக உழையுங்கள் - மாணவர்களுக்கு மோடி அறிவுரை
டெல்லி: நன்கு படியுங்கள், நன்றாக விளையாடுங்கள், கடுமையாக உழையுங்கள் என்று மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.
இன்று ஆசிரியர் தினமாகும். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார். மாணவ, மாணவியரின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
டெல்லி மானேக்ஷா ஆடிட்டோரியத்தில் மோடி உரை நிகழ்த்தினார். இந்த உரையை அனைத்துப் பள்ளிக் கூடங்களிலும் இன்று நேரடியாக ஒளிபரப்பு செய்தனர்.
பிரதமரின் பேச்சிலிருந்து....

நல் வாய்ப்பு
மாணவர்களுடன் உரையாற்ற எனக்கு இந்த நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாளில் ஆசிரியர்களை எப்படி மதிக்க வேண்டும் என்றும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நாளுக்கு தான் ஆசிரியர் தினம் தனது தனித்துவத்தை இழந்து வருகிறது.

ஆசிரியர்கள் முக்கியம்
அன்றாட வாழ்க்கையில் ஆசிரியர்கள் முக்கியத்துவம் உள்ளவர்கள் என்பதை அனைவரும் உணரவேண்டும். இந்தியாவில் நல்ல ஆசிரியர்களுக்கு தேவையிருக்கிறது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ரோல் மாடலாக விளங்குகின்றனர். அதனால் தான் சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கதாநாயகர்களாக தெரிகின்றனர். ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை அனைவரும் தரவேண்டும்.

பள்ளியை சுத்தப்படுத்துங்கள்
ஜப்பானில் ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளியை சுத்தப்படுத்துகின்றனர். நம் நாட்டில் ஏன் ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளியை சுத்தப்படுத்தக்கூடாது. மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கவேண்டும். கற்றவர்கள் அருகிலுள்ள பள்ளியில் வாரத்தில் ஒரு நாளாவது பாடம் நடத்தவேண்டும்

கடுமையாக வேலை பாருங்கள்
நன்கு படிக்க வேண்டும், நன்றாக விளையாட வேண்டும், வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறையாவது வியர்வை சிந்த உழைக்க வேண்டும்.

ஒழுங்கு அவசியம்
நான் டாஸ்க் மாஸ்டர். எனக்கு எந்த வேலை செய்தாலும் அதில் ஒழுங்கு இருக்க வேண்டும். அதைத்தான் நான் விரும்புவேன். நான் வேலையை ஏவுபவன் இல்லை. வேலை செய்யப் பிடிக்கும் குணம் கொண்டவன்.

சுயசரிதைகளைப் படியுங்கள்
மாணவர்கள் வரலாற்று நாயகர்களின் சுயசரிதங்களைப் படிக்க வேண்டும். தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள வேண்டும். லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும்.

கூகுள் குரு
இன்று நமது வேலைகள் பலவற்றையும் கூகுள் குருதான் செய்து வருகிறது. அது தகவல்தான் தருகிறது. ஆனால் அறிவை வளர்ப்பதில்லை.

டெல்லியைச் சுற்றிப் பார்க்க எனக்கு நேரமில்லை
எனக்கு டெல்லியைச் சுற்றிப் பார்க்க நேரம் இல்லை. ஆபீஸ் விட்டால் வீடு, விட்டால் அபீஸ் என்று இருக்கிறேன்.

முதல்வர் - பிரதமர் பதவி வித்தியாசம்
இரு பதவிகளுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் கிடையாது. இரு பதவியிலும் நான் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. சீக்கிரமே எழுந்திருக்க வேண்டியுள்ளது. முதல்வர் பதவி அனுபவம் எனக்கு நிச்சயம் நிறைய உதவியாக உள்ளது.

அனுபவமே நல்லாசிரியர்
ஒருவருக்கு அனுபவமே நல்ல ஆசிரியர் என்பார்கல். அதேசமயம், ஒரு மனிதனின் அனுபவம் என்பது அவன் சார்ந்த கல்வியையும் பொறுத்தது.

கிளாஸ் லீடராக கூட இருந்ததில்லை
நான் பள்ளியில் படித்த காலத்தில் கிளாஸ் லீடராக கூட இருந்ததில்லை. பிரதமர் பதவிக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. நான் எதையும் பெரிதாக கனவு காண்பதில்லை. எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன். அதில்தான் மகிழ்ச்சி உள்ளது.

நீங்க பிரதமராகனுமா...
நீங்கள் பிரதமராக வேண்டும் என்று நினைத்தால் 2024ம் ஆண்டு தேர்தலுக்குத் தயாராகுங்கள். அப்போதுதான் அதுவரைக்கும் எனக்குப் பிரச்சினை இருக்காது. இந்தியா ஜனநாயக நாடு. யார் வேண்டுமானால் பிரதமர் பதவிக்கு வரலாம். உங்களில் ஒருவர் பிரதமராகும்போது பதவியேற்பு விழாவுக்கு என்னையும் அழையுங்கள்.












Click it and Unblock the Notifications