மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு ஜூலை 30ல் தூக்கு தண்டனை?
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு ஜூலை 30ம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் இருவரும் பாகிஸ்தானில் பதுங்கியதால் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். டைகர் மேமனின் தம்பி யாகூப் மேமன் உள்பட 12 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் அது மும்பை உயர்நீதிமன்றம் உறுதியும் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தண்டனையை எதிர்த்து யாகூப் மேமன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உறுதி செய்து கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 21ம்தேதி தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர் குடியரசுத்தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும், மரண தண்டனையை மறு ஆய்வு செய்யுமாறும் கடந்த ஆண்டு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேமன் மனு தாக்கல் செய்தார்.
அதன்படி, ஏற்கனவே 20 ஆண்டு சிறையில் இருந்து விட்ட நிலையில், தூக்கு தண்டனையும் விதித்திருப்பது தவறானது என்றும், ஒரு குற்றத்துக்கு 2 தண்டனைகள் விதிக்க முடியாது என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை கடந்த ஆண்டு ஜூன் 2ம்தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், யாகூப் மேமனுக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.
பின்னர் இந்த மறு ஆய்வு மனு நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஜே.செல்லமேஸ்வர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது. இந்த மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 9ம் தேதி வழங்கப்பட்டது. அதன்படி, யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், அவரது மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் யாகூப் மேமன் தரப்பில் தண்டனையை குறைக்ககோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வரும் ஜூலை 21ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. அப்போது அவருடைய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டால், நாக்பூர் மத்திய சிறையில் ஜூலை 30ம் தேதி காலை 7 மணிக்கு யாசூப் மேனனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தண்டனையை நிறைவேற்ற மகாராட்டிரா அரசு தயாராகி வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.