சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.. யாகூப் மேமன் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை!
டெல்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், தீவிரவாதி யாகூப் மேமனுக்கு வரும் 30ம் தேதி நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நாக்பூர் சிறையிலுள்ள யாகூப் மேமனுக்கு இம்மாதம் 30ம் தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தனது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி யாகூப் மேமன், மகாராஷ்டிரா கவர்னருக்கு ஒரு கருணை மனு அனுப்பியுள்ளார்.
அதோடு, தனக்கான சட்டப்பூர்வ நிவாரணங்கள் முடிந்துவிடவில்லை என்பதால் தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஏ.ஆர்.தாவே மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, தூக்கு தண்டனை நிறைவேற்றத்துக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி ஏ.ஆர்.தாவே தெரிவித்தார். ஆனால், நீதிபதி குரியன் ஜோசப்போ, அவசர கதியில் தூக்கு தண்டனை வேண்டாம். சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடியும்வரை காத்திருக்கலாம் என்றார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த அமர்வு, விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும்வரை, யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி தாவே தனது உத்தரவில் கூறியது: சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை விதித்த பிறகும், பல்வேறு கட்டங்களை அடைந்து, மீண்டும் இங்கேயே இந்த வழக்கு வந்துள்ளது. இதுபோன்ற பழக்கத்தை ஊக்குவித்தால், இது ஒரு தவறான முன் உதாரணமாகிவிடும். தண்டனை பெற்ற பல கைதிகளும், இதேபோல மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அப்படி செய்தால், வழக்குகள் முடிவுறாத பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கும். எனவே 30ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க முடியாது.
நீதிபதி குரியன் ஜோசப் உத்தரவு: தூக்கு தண்டனையை சீராய்வு செய்யும் மனு மீது உரிய வகையில் விசாரணை நடைபெறவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சுப்ரீம் கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும். சரியாக விசாரிக்காமல் ஒருவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினால், அது மனித உரிமை மீறலாகிவிடும். எனவே, விசாரணை முடியும்வரை தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கிறேன். இவ்வாறு தனது உத்தரவில் குரியன் குறிப்பிட்டார்.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யாகூப் மேமனின் வழக்கறிஞர், தலைமை நீதிபதியை சந்தித்து, கலந்து ஆலோசித்தார். அப்போது, "கூடுதல் நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்படும்" என்று தலைமை நீதிபதி தத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.