திட்டக் கமிஷனின் துணை தலைவராகிறார் யஷ்வந்த் சின்ஹா?
டெல்லி: மத்திய திட்ட கமிஷனின் துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நியமிக்கப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடவில்லை. அவரது மகன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில அரசியலில் தீவிர கவனம் செலுத்த தொடங்கினார் யஷ்வந்த் சின்ஹா. அவரையே முதல்வர் வேட்பாளர் என்று கூட பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி கூறியும் இருந்தார்.
இதனிடையே மத்திய அரசு திட்டக் கமிஷனை கலைக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் இதை ராஜ்யசபாவில் மறுத்த மத்திய அமைச்சர் இந்தர்ஜித் ராவ், திட்டக் கமிஷனின் அமைப்பை மாற்றும் எண்ணம் தற்போது இல்லை என்றார்.
இந்த நிலையில் திட்டக் கமிஷன் துணை தலைவரை நியமிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்பதவிக்கு பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இதில் யஷ்வந்த் சின்ஹாவையே திட்டக் கமிஷன் துணைத் தலைவராக நியமிக்க கூடுதல் வாய்ப்பிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.