கர்நாடகாவில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் வருகிறது- எதியூரப்பா கடும் எதிர்ப்பு

மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கையை ஒழிக்க சமூக ஆர்வலர் தபோல்கர் போராடினார். ஆனால் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அம்மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டுவர மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. குழந்தைகளை கோயில் கூரைகள் மீது தூக்கி எறிவது, எச்சில் இலைகள் மீது படுத்து உருளுவது போன்ற எந்தெந்த நடவடிக்கைகளை மூடநம்பிக்கைகள் என வரையறுப்பது என்பது குறித்தும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு கர்நாடகா முன்னாள் முதல்வர் எதியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா, மூடநம்பிக்கையை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.
மடாதிபதிகள் பாதபூஜை செய்யக்கூடாது, அலுவலகங்களில் பூஜை செய்யக்கூடாது, வீட்டு முன் ரங்கோலி போடக்கூடாது என்று சொல்வதற்கு சித்தராமையா யார்?.
இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது. இதை சகித்துக்கொள்ள முடியாது. அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மனதுக்கு வந்தபடி செய்வது என்பது சரியல்ல என்றார்.
இதேபோல் முன்னாள் அமைச்சர் ஷோபா கூறும்போது, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களில் உள்ள மூடநம்பிக்கையை தடை செய்ய இந்த அரசுக்கு தைரியம் உள்ளதா?. மூடநம்பிக்கையை பற்றி பேசும் சித்தராமையா, நாளை பெண்கள் தாலி போட்டுக் கொண்டு நடமாடக்கூடாது என்று சொன்னால் இதை பார்த்துக் கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க முடியுமா?. இதற்காகவா காங்கிரசுக்கு மக்கள் அதிகாரம் கொடுத்தனர்?. இந்த அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications