கடந்த 9 ஆண்டுகளில் சர்வதேச அளவில் இந்தியா கவனம் பெற்றுள்ளது! உ.பி முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: கடந்த 9 ஆண்டுகளில் சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவின் பெயர் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் வியப்புடன் பார்த்து வருகின்றன என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக வாரணாசி வந்திருந்த யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியின் 9 ஆண்டுக்கால ஆட்சியின் பெருமைகளை எடுத்துரைக்கும் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "2014 ஆம் ஆண்டுக்கு முன்பு மத்திய அரசின் அப்போதைய ஆட்சியின் மீது மக்கள் அவநம்பிக்கையுடனும், கோபத்துடனும் இருந்தார்கள். ஆனால், தற்போது மக்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் பிம்பம் மாறுதல் அடைந்துள்ளது. எல்லைகள் பலமடைந்திருக்கின்றன. இந்தியா எப்படி வளர்ந்துக்கொண்டு இருக்கிறது என்பதை எதிர்க்கட்சிகள் கூட பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. நமது நாட்டின் கவுரவம் மேம்பட்டிருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் மேம்பாட்டிற்காகவும், மனிதக்குலத்தின் நலனுக்காகவும் பாஜக பாடுபடுகிறது. இதன் விளைவாகதான் தற்போது இந்தியா உலக நாடுகளின் வரிசையில் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து இருக்கிறது.
ஒரு காலத்தில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் தற்போது அமைதிப் பாதையில் சென்றுள்ளது. பிரிவினைவாதிகளின் கைகளில் இருந்த வடகிழக்கு மாநிலங்கள் தற்போது வளர்ச்சியின் பாதையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் 120 மாவட்டங்களில் நக்சல்கள் தீவிரமாக இயங்கி வந்தனர். தற்போது இவர்கள் 3-4 மாவட்டங்களில் முடக்கப்பட்டுள்ளனர். இதற்கு பிரதமர் மோடியின் தலைமைதான் காரணம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications