பல முறை வந்துட்டேன்.. என் வேண்டுதலை ஏன் நிறைவேற்றல? கோயில்களை இடித்து தரைமட்டமாக்கிய இளைஞர்! 'ஷாக்'
இந்தூர்: பல முறை கோயிலுக்கு வந்து வேண்டியும் தனது வேண்டுதலை கடவுள் நிறைவேற்றவில்லையே என்ற ஆத்திரத்தில் 2 கோயில்களை இடித்து தரைமட்டமாக்கிய இளைஞரை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அடுத்தடுத்த நாட்களில் இன்னும் 3 கோயில்களை இடிக்க தான் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு விஷயமும் ஒரு அளவோடு நிற்க வேண்டும். அது கடவுள் நம்பிக்கையாக இருந்தாலும் சரி. அப்படியில்லாமல், அளவுகடந்த கடவுள் நம்பிக்கையும், அதீத பக்தியும் நமக்கே ஆபத்தானதாக மாறிவிடும். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது.

பக்தியில் சிறந்த இளைஞர்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் நரேஷ் குமார் (24). பொறியியல் பட்டதாரியான இவருக்கு சிறு வயதில் இருந்தே கடவுள் பக்தி அதிகம் எனக் கூறப்படுகிறது. இவர் வயதை ஒத்த இளைஞர்கள் தியேட்டர், பார்க் என சுற்றிக்கொண்டிருக்க, நரேஷ் குமாரோ பூஜை, புனஸ்காரம் போன்ற பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். இந்த சூழலில், இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

'கண்'ணால் கைகூடாத திருமணம்
ஆனால், எந்தப் பெண்ணுக்கும் நரேஷ் குமாரை பிடிக்கவில்லை. சிறு வயதில் விபத்து ஒன்றில் அவரது ஒரு கண்ணில் அடிபட்டதில் அந்தக் கண் எப்போதும் மூடியபடியே இருக்குமாம். இதை காரணம் காட்டி பல பெண்கள் அவரை நிராகரித்துள்ளன. இதனால் ஒருகட்டத்தில், தனக்கு திருமணமே ஆகாதோ எனற பயம் நரேஷுக்கு ஏற்பட்டுள்ளது. எத்தனையோ மருத்துவர்களை பார்த்தும், அவர்கள் முடியாது என கைவிரித்துவிட்டனர்.

கோயில் கோயிலாக வேண்டுதல்
இந்நிலையில், தனது கண்ணை மறுபடியும் கொண்டு வர, கடவுளால் மட்டுமே முடியும் என நம்பிய நரேஷ், ஒவ்வொரு கோயிலாக சென்று வழிபட்டு வந்தார். மேலும், ஆயிரக்கணக்கில் செலவு செய்து பல கோயில்களில் பூஜைகளையும் அவர் செய்தார். இவ்வாரு ஓராண்டுக்கும் மேலாக பல கோயில்களுக்கு சென்று வேண்டியும் அவரது கண் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் விரக்தியின் உச்சிக்கே சென்ற நரேஷ், தன் வேண்டுதலை நிறைவேற்றதாக தெய்வங்களை பழிவாங்க முடிவெடுத்தார்.

கோயில் இடிப்பு - கைது
அதன்படி, மூன்று தினங்களுக்கு முன்பு சந்தன் நகர், சாத்ரிபூரா ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு சிறிய இந்து கோயில்களை இரவோடு இரவாக சுத்தியலால் இடித்து தள்ளினார் நரேஷ் குமார். அடுத்த நாள் காலையில் இதை பார்த்த அப்பகுதி மக்கள் கொந்தளித்து போயினர். மேலும், வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களே இந்த காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என வதந்தி பரவவே பதற்றமான சூழலும் உருவானது. அதன்பிறகு, அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்த போது, சம்பவம் நடந்த தினத்தன்று நரேஷ் குமார் அப்பகுதிகளில் சுற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீஸார் விசாரித்ததில், நடந்த சம்பவங்களை நரேஷ் குமார் ஒப்புக்கொண்டார். மேலும், அடுத்தடுத்த நாட்களில் இன்னும் 3 கோயில்களை இடிக்க தான் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications