5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் நஜீம் சைதி ஆலோசனை- மார்ச் 2-வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு?
டெல்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபை தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் வரும் மார்ச் மாதம் 2வது வாரத்தில் அறிவிப்பு வெளியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.
அதிமுக அரசின் ஆட்சி காலம் வரும் மே மாதத்துடன் முடிகிறது. இதே போன்று புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஆளும் அரசுகளின் பதவிக்காலமும் நிறைவடைய உள்ளது.
இதையடுத்து அந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுவை வந்து அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உள்பட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் டெல்லி சென்றனர். அந்த 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் சைதி மூன்று நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் இன்றுடன் முடிந்துள்ளது. இதையடுத்து வரும் மார்ச் மாதம் 2வது வாரத்தில் தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.