அமெரிக்க பொதுத் தேர்தலில் போட்டியிடும் 10 இந்திய வம்சாவளியினர்
வாஷிங்டன்: 2014ம் ஆண்டுக்கான அமெரிக்க பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 பேர் போட்டியிடுகிறார்கள்.
அமெரிக்க பொதுத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் தான் உள்ளன. இந்நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாளியைச் சேர்ந்த 10 பேர் போட்டியிடுவது தெரிய வந்துள்ளது.
அவர்களின் விவரம் வருமாறு,
கலிபோர்னியாவில் தற்போது எம்.பி.யாக இருக்கும் அமி பெரா போட்டியிடுகிறார். கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் பதவிக்கான தேர்தலில் கமலா ஹாரிஸ் மீண்டும் போட்டியிடுகிறார். கலிபோர்னியா ஆளுநர் பதவிக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நீல் கஷ்காரி போட்டியிடுகிறார்.
ஒபாமா நிர்வாகத்தில் வணிகத் துறையின் கூடுதல் துணை செயலாளராக இருந்த ரோ கன்னா கலிபோர்னியா மாகாணத்தின் 17வது தொகுதியில் போட்டியிடுகிறார். அதே பகுதியில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் மெடிசினில் துணை பேராசிரியராக இருக்கும் வனிலா மாதுர் சிங் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
ஒரே சீட்டுக்கு இரண்டு இந்திய வம்சாவளியினர் போட்டியிடுவது இதுவே முதல் முறை. இதில் மாதுர் சிங் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.
நியூ ஜெர்சியில் உள்ள 12வது தொகுதியில் உபேந்திர சிவுகுலா போட்டியிடுகிறார். பெனிசில்வேனியாவில் மனன் திரிவேதியும், விஸ்கான்சினில் அமர்தீப் கலேகாவும் போட்டியிடுகிறார்கள். கடந்த 2012ம் ஆண்டு விஸ்கான்ஸினில் உள்ள சீக்கியர்கள் கோவிலில் நடிந்த தாக்குதலில் கோவிலின் தலைவரும், கலேகாவின் தந்தையுமான சத்வந்த் கலேகோ சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அயோவாவில் ஸ்வாதி தண்டேகரும், இலினாய்ஸில் மஞ்சு கோயலும் போட்டியிடுகிறார்கள்.