ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பள்ளி மாணவிகள் பலி
காபுல்: ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து உண்டான கூட்ட நெரிசலில் சிக்கி பள்ளி மாணவிகள் 12 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு திங்கட்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் 263 பேர் பலியாகியுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள தாலுகான் நகரில் இருக்கும் பள்ளி ஒன்றில் இருந்த மாணவ, மாணவியர் கட்டிடத்தை விட்டு வெளியேற முந்தியடித்தனர். அப்போது கூட்டநெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி 12 மாணவிகள் பலியாகியுள்ளனர்.
மேலும் கூட்டநெரிசலில் சிக்கி 35 பேர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து டெல்லி, ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.