நியூயார்க் அருகே மரத்தில் கொன்று தொங்கவிடப்பட்ட 25 பூனைகள் -சைக்கோ கொலையாளி கைவரிசையா?
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் அருகே 25 பூனைகளை அடித்துக்கொன்று அதை பாலத்தின் பைகளில் அடைத்து மரத்தில் கட்டி தொங்கவிட்ட நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
நியூயார்க் நகரின் அருகேயுள்ள யோன்கர்ஸ் பகுதியில் ஹட்சன் நதி ஓடுகிறது. அதையெட்டினாற்போல மரங்கள் அடர்ந்த காடு உள்ளது. இதில் நியூயார்க் நகர துப்புரவு பணியாளர்கள் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு மரத்தின் கிளைகளில் பல பாலத்தீன் பைகள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதை பார்த்து ஏதோ வித்தியாசமாக உள்ளதே என்று அருகில் சென்று பார்த்துள்ளனர். அந்த பேக்குகளை திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அதற்குள் பூனைகள் கொன்று வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 25 பேக்குகளில் பூனைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.
உடனடியாக போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அப்பகுதியில் சோதனை நடத்தியதில் மரக்கட்டை, இரும்பு கம்பிகள் கிடந்தது தெரியவந்தது,. மருத்துவ குழுவும் வரவழைக்கப்பட்டு பூனைகளுக்கு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது.
சில பூனைகள் மூன்று வருடங்களுக்கு முன்பே கொல்லப்பட்டிருப்பதும், சில பூனைகள் இரு தினங்களுக்கு முன்புதான் கொல்லப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
பூனைகளின் தலையில் பலமாக தாக்கப்பட்டு அதன் மண்டை எலும்புகள் உடைந்திருப்பதை பார்க்கும்போது இரும்பு கம்பியாலோ அல்லது கட்டையாலோ தாக்கி கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பூனையை கொன்று தொங்கவிடும் சமய வழிபாட்டு முறைகள் எதுவும் நியூயார்க் பகுதியில் இல்லை என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே இது சைக்கோ கொலையாளி வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் பூனைகளை கொன்றால் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனையும், 5ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது குறிப்பிடத்தக்கது.