மாயமான விமானத்தை மீண்டும் தேடிச் சென்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்
பெர்த்: இந்திய பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் தொடர்ந்து தேடி வருகிறது. முதலில் அது கொண்டு வந்த தகவலில் விமானம் பற்றி எதுவும் இல்லை.
இந்திய பெருங்கடலில் 239 பேருடன் விழுந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை பல நாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் தேடி வருகின்றன. அப்படியும் இதுவரை உருப்படியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தான் ஆளில்லா நீர்மூழ்கி கப்பலான ப்ளூஃபின் 21-ஐ கடலின் தரை பரப்புக்கு அனுப்பினர்.
ஆழம்
ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் திங்கட்கிழமை மதியம் கடலின் தரை பரப்புக்கு சென்றது. ஆனால் ஆழம் அதிகம் இருந்ததால் பாதியில் திரும்பிவிட்டது.
தகவல்
அந்த நீர்மூழ்கி கப்பல் சேகரித்து வந்த தகவல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் விமானம் பற்றிய ஒரு தகவல் கூட இல்லை.
மீண்டும் தேடல்
முதல் பயணம் தோல்வி அடைந்ததால் நேற்று இரவு நீர்மூழ்கி கப்பல் மீண்டும் கடலின் தரை பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது ஏதாவது தகவல் கிடைக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
2 மாதங்கள்
ப்ளூஃபின் 21 கப்பல் விமானம் விழுந்ததாக கூறப்படும் பகுதியை முழுவதுமாக ஸ்கேன் செய்ய 6 வாரங்கள் முதல் 2 மாதங்கள் வரை ஆகும் என்று அமெரிக்க கடற்படை கணித்துள்ளது.
விமானங்கள்
11 ராணுவ விமானங்கள் மற்றும் 3 பயணிகள் விமானங்கள் இந்திய பெருங்கடலில் மிதக்கும் பொருட்களை ஆய்வு செய்யும் பணியில் இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளன.