சவூதியில் 3 போலி ஹஜ் ஏஜென்சிகள் கண்டுபிடிப்பு: 50,000 ரியால் பறிமுதல்
ஜெத்தா: அரபியர்கள், சவூதியைச் சேர்ந்த சிலர் மற்றும் ஆசியர்கள் சிலர் நடத்திய 3 போலி ஹஜ் ஏஜென்சிகளை ஜெத்தா போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் ஹஜ் புனித பயணம் செல்ல மக்களிடம் வாங்கிய 50,000 சவூதி ரியாலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சவூதியில் உள்ள ஜெத்தாவில் அரபியர்கள், சவூதியைச் சேர்ந்த சிலர் மற்றும் ஆசியர்கள் சிலர் நடத்தி வந்த 3 போலி ஹஜ் ஏஜென்சிகளை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர். அந்த நபர்கள் ஹஜ் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நபர் ஒருவருக்கு 4,500 சவூதி ரியால் முதல் 5,500 ரியால் வரை வசூலித்துள்ளனர். அவர்கள் இதுவரை வசூல் செய்திருந்த 50,000 ரியால் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சவூதி ஹஜ் துணை அமைச்சர் ஹாதிம் காதி கூறுகையில்,
ஹஜ் புனித பயணம் செய்ய விரும்புபவர்கள் போலியான ஏஜென்சிகளை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். ஹஜ் துறையிடம் இருந்து முறையான பெர்மிட் பெற்ற ஏஜென்சிகளா என்பதை பார்த்து தான் மக்கள் பணத்தை செலுத்த வேண்டும். பெர்மிட் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும். பழைய பெர்மிட் செல்லாது.
அனுமதி பெற்ற நிறுவனங்கள் மற்றும் ஹஜ் ஏஜென்சிகளை தெரிந்து கொள்ள மக்கள் ஹஜ் அமைச்சக இணையதளத்தை பார்க்கவும். மேலும் 8002444480 என்ற டோல் ஃப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டும் விவரங்களை பெறலாம் என்றார்.
சபா, பவாதி மற்றும் முஷ்ரிபா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட போலி ஹஜ் ஏஜென்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் முஷ்ரிபாவில் இருந்த ஏஜென்சியை 3 ஆசியர்கள் நடத்தி வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து 5,500 ரியால் வாங்கினர். அவர்களின் ஏஜென்சியில் இருந்த 23,000 ரியால் பறிமுதல் செய்யப்பட்டது. பவாதி ஏஜென்சியை 3 அரபியர்கள் நடத்தி வந்தனர். அவர்கள் பயணிகள் ஒவ்வொருவரிடமும் 4,500 ரியால் வீதம் வசூலித்திருந்த 26,000 ரியால் பறிமுதல் செய்யப்பட்டது.
மூன்றாவது ஏஜென்சி சவூதி குடிமக்களால் நடத்தப்பட்டு வந்தது. அவர்கள் நபர் ஒருவருக்கு 5,000 ரியால் வசூலித்துள்ளனர்.