கென்யா ‘வெஸ்ட் கேட்’ தாக்குதல்: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
நைரோபி: கென்யாவில் வெஸ்ட்கேட் வணிக வளாகத்தில் உள்ள 2 தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மதியம் கென்யாவிலுள்ள வணிகவளாகமான வெஸ்ட் கேட்டை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அங்கு பயங்கரத் தாக்குதலை நடத்தியது ஷெபாப் என்ற தீவிரவாத அமைப்பு. இந்த பயங்கரவாதத் தாக்குலில் பலியான 68 பேரில் இருவரும், காயமடைந்த 200 பேரில் 5 பேரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க யூனியன் படைகளுக்கும், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இடையில் சோமாலிய நாட்டில் நடந்துவரும் போரில் கென்யா தலையிட்டதற்கு பழிவாங்கவே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஷெபாப் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், "வெஸ்ட்கேட்' வணிக வளாகத்தை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் அந்நாட்டு ராணுவத்தினர். நேற்றுஅதிகாலை வணிக வளாகத்தின் உள்ளிருந்து கடுமையான துப்பாக்கி சப்தங்களும், நான்கு வெடியோசைகளும் கேட்ட வண்ணமிருந்தன. இந்த சப்தங்கள் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும், பிறகு படிப்படியாகக் குறைந்துவிட்டதாகவும் நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வளாகத்தில் இருப்பவர்களில், பயங்கரவாதிகள் யார் யாரென்று ராணுவம் இனம் பிரித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் நேற்று இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனபோதும், இன்னும் ஏராளமான பிணைக்கைதிகள் உள்ளே இருப்பதாகவும், எனவே, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் சிக்கலான பணி என்றும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சோமாலிய பயங்கரவாத அமைப்பான ஷெபாப், கென்யா துருப்புக்கள் பயங்கரவாதிகளை நெருங்க முற்பட்டால், பிணைக்கைதிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
""முஜாஹிதீன்களை நோக்கி நகரும் கிறித்தவர்கள், அவர்கள் செயலுக்கு பிணையக்கைதிகள் விலைகொடுக்க வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் தெரிவித்துள்ள ஷெபாப், வளாகத்துக்குள் இருக்கும் பயங்கரவாதிகளுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பிணையக் கைதிகளை பத்திரமாக மீட்கும் பணியில், கென்யா பாதுகாப்புப் படையினருடன் இஸ்ரேலிய வீரர்களும், பிரிட்டன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக கென்யா பாதுகாப்பு வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
வணிக வளாகத்திற்குள் சென்ற ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘உள்ளே கிடக்கும் சடலங்களைப் பார்க்கும் போது பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்' என அச்சம் தெரிவித்துள்ளார்.