லண்டனில் 'டிராம்' கவிழ்ந்து கோர விபத்து.. 7 பேர் சாவு, 50 பயணிகள் காயம்
தெற்கு லண்டன் அருகே டிராம் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். அதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதால் அங்குள்ள மக்களிடையே இந்நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்: தெற்கு லண்டனில் புதன்கிழமை அதிகாலை டிராம் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 50-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த விபத்துக்கு காரணமான டிராம் டிரைவரை சதித்திட்டம் ஏதேனும் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
அடிஸ்காம் அருகில் நிகழ்ந்த இந்த விபத்தின்போது டிராம் வாகனத்துக்கு அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் டிரைவர் அந்த வாகனத்தை இயக்கியதாக ரயில் விபத்து விசாரணைப் பிரிவு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்துக்குறித்து துணைத் தலைமைக் காவலர் அட்ரியன் கூறுகையில், இந்த விபத்தின் விளைவாக 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என தெரிவித்தார். விபத்தில் காயம் அடைந்தவர்களில் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்து புலனாய்வுப்பிரவு போலீசார் இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து தீர விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் தேரேசா மே மீட்புப் பணிகள் துரிதமாக நடந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். லணடன் மேயர் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்து குறித்து பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.