35 ஆயிரம் இந்தியர்களுக்கு க்ரீன் கார்டுகள்: காத்திருப்போர் பட்டியலில் மேலும் 70,000 பேர்!
வாஷிங்டன்(யு.எஸ்): கடந்த 2013 ஃபிஸ்கல்(Fiscal) ஆண்டில் அமெரிக்காவில் 35 ஆயிரத்து 700 இந்தியர்களுக்கு க்ரீன் கார்டு எனப்படும் நிரந்தர விசா வழங்க்ப்பட்டுள்ளதாக, வெளியுறவுத்துறை இணையதளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முந்தைய 2012 நிதி ஆண்டில் 33 ஆயிரத்து 200 இந்தியர்களுக்கு க்ரீன்கார்டு வழங்கப்பட்டுள்ளது.
ஹெச் 1 விசா
சுற்றுலா தவிர, இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்பவர்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு (ஹெச் 1) விசாவிலோ அல்லது மேல் படிப்பு விசாவிலோ (எஃப் 1) செல்கிறார்கள். இதில் அதிகபட்சமாக அந்தந்த விசாவுக்குரிய வருடங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. எஃப் 1 விசாவில் சென்றவர்கள் படிப்பு முடிந்த பிறகு ஹெச் 1 விசாவுக்கு மாற வேண்டும்.
நிரந்தர விசா
மேலும், வேலைவாய்ப்பு விசாவில், குறிப்பிட்ட நிறுவனத்திலோ அல்லது மாற்றலாகி வேறு ஒரு நிறுவனத்திலோதான் பணிபுரிய முடியும். இத்தகைய விசாவில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளும் உண்டு. அதனால், க்ரீன்கார்டு எனப்படும் நிரந்தர விசா பெற்றுக்கொள்ளவே பெரும்பாலோனோர் விரும்புகின்றனர். அதுவும், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் மூலமாகத்தான் விண்ணப்பிக்க முடியும்.
காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, விண்ணப்பித்த சில மாதங்களிலேயே க்ரீன் கார்டுகள் கிடைத்து வந்தன. 2000 ஆண்டு காலக்கட்டத்தில் அதிகப்படியான இந்தியர்கள் கம்ப்யூட்டர் துறையில் ஹெச்1 பி விசாக்களில் வந்த பிறகு, க்ரீன்கார்டு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமானது. ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட அளவு க்ரீன்காடுகள் தான் வழங்கப்படுகின்றன். அவற்றில் இந்தியாவுக்கான பங்கு சுமார் 7 சதவீதம் மட்டுமே.
70 ஆயிரம் இந்தியர்கள்
இபி 1, இபி 2, இபி 3 என மூன்று வகையான பிரிவுகளில் வேலைவாய்ப்பு க்ரீன்கார்டுகள் வழங்கப்படுகின்றன. அந்தந்த பிரிவில் மற்ற நாடுகளுக்கான கோட்டாவில் மீதம் இருந்தால், காத்திருக்கும் நாட்டை சார்ந்தவர்களுக்கு பிரித்து வழஙகப்படுகிறது. இபி 1 பிரிவில் மீதம் இருந்தால் இபி 2 பிரிவுக்கும், அதிலும் மீதம் இருந்தால் இபி 3 பிரிவுக்கும் அவை ஒதுக்கப்படுகின்றன. அக்டோபர் மாத யுஎஸ்சிஐஎஸ் (USCIS) அட்டவணைப்படி சுமார் 70,ஆயிரம் இந்தியர்கள் க்ரீன்கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
விசா சீர்திருத்த சட்டம் நிறைவேறுமா? கை கொடுக்குமா?
கடந்த ஆண்டு விசா சீர்திருத்த சட்ட மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது, வேலை வாய்ப்பு விசாக்களில் நாடுகளுக்கிடையே ஒதுக்கீடு தேவையில்லை என்பது அதில் ஒரு அம்சமாகும். அந்த வகையில் முதலில் விண்ணப்பிப்பவர் முதலில் பெறமுடியும். காத்திருக்கும் இந்தியர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
ஆனால் காங்கிரஸ் சபையில் மசோதா நிறைவேறுவது கேள்விக்குறியாகி விட்டது. 2014 இடைத்தேர்தல் ஆண்டு என்பதால், மசோதா நிறைவேறும், நிறைவேறாது என இரு தரப்பு எதிர்ப்பார்புகள் உள்ளன. அப்படி சீர்திருத்த மசோதா நிறைவேறினால் கணிசமான இந்தியர்களுக்கு க்ரீன்கார்டு கிடைக்க வாய்ப்புள்ளது. மூன்று கட்டமாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
கட் ஆஃப் தேதி
முதல் இரண்டு கட்ட விண்ணப்பங்கள் எப்போது வேண்டுமானலும் அதற்குரிய முறைப்படி பதிவு செய்யலாம். முதல் விண்ணப்ப தேதியை கணக்கிட்டு மூன்றாம் கட்ட விண்ணப்பத்திற்கு கட் ஆஃப் தேதி நிர்ணயிக்கப்படுகிறது. 2007 ஆகஸ்டு கட் ஆஃப் தேதிக்கு பிறகு இபி 3 பிரிவிலும், 2010 மே மாத .கட் ஆஃப் தேதிக்கு பிறகு இபி 2 பிரிவுக்கும், யாரும் மூன்றாம் கட்ட விண்ணப்பம் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.