ஆப்கன் அதிபர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது- வேட்பாளர் அப்துல்லா எதிர்ப்பு
காபூல்: ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்ற அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு அடைக்கலம் தந்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து தாலிபான்களின் ஆட்சியை வீழ்த்தி, ஹமீது கர்சாயை அதிபராக அமர்த்தியது. அதைத் தொடர்ந்து அவர் 13 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்து வருகிறார்.
அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட ஹமீது கர்சாய்க்கு அனுமதி தரப்படவில்லை.
இந்தத் தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா, பொருளாதார நிபுணர் அஷ்ரப் கனி ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலில் யாரும் 50 சதவீத ஓட்டுக்களைப் பெற முடியவில்லை. இதன் காரணமாக அங்கு இரண்டாவது சுற்று தேர்தல் கடந்த மாதம் 14ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலின் முதல் கட்ட முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்தத் தேர்தலில் அப்துல்லா அப்துல்லா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் அஷ்ரப் கனி 56.44 சதவீத ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இறுதிக்கட்ட முடிவு வரும் 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இதில் ஓட்டு சதவீதம் மாறக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. இந்தத் தேர்தல் முடிவினை அப்துல்லா அப்துல்லா ஆதரவாளர்கள் முழுமையாக நிராகரித்து விட்டனர்.
இதுபற்றி அப்துல்லா அப்துல்லாவின் செய்தி தொடர்பாளர் முஜிப் ரகுமான் ரஹிமி கூறும்போது, இப்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்கவில்லை. இதில் மக்களின் ஓட்டுகளுக்கு எதிராக நடந்த சதி என கருதுகிறோம். கூறினார்.
இந்தத் தேர்தலில் பெருமளவு மோசடி நடந்துள்ளதாக அப்துல்லா அப்துல்லா குற்றம் சாட்டி உள்ளார். இவர் தாலிபான்களுக்கு எதிராக தீவிரமாக போராடியவராகும். இதனிடையே, ஆப்கன் தேர்தலில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தால் அந்த நாட்டிற்கு அளிக்கப்படும் ராணுவ, பொருளாதார உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கைவிடுத்துள்ளது.