கொரோனாவுடன் கைகோர்க்கும் அட்லாண்டிக் புயல்.. விளைவுகள் பன்மடங்காகுமே!.. அச்சத்தில் அமெரிக்கா!!
மியாமி: கொரோனா வைரஸை காட்டிலும் மோசமான மற்றும் பொருளாதார ரீதியில் சரிவை ஏற்படுத்தும் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மேலும் புரட்டி போடவுள்ளது.
Recommended Video
கொரோனாவால் வல்லரசு நாடான அமெரிக்காவில் கட்டுக்கடங்காத நிலையில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் கொரோனாவால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துவிட்டனர்.
நியூயார்க்கில் மட்டுமே 1.59 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூ ஜெர்சியில் 51 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சன்ஸ்டேட் மாகாணம் என அழைக்கப்படும் புளோரிடாவில் 17 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 419 பேர் பலியாகிவிட்டனர்.
இந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. பலி 239ஆக உயர்வு
நாட்டு மக்கள்
அமெரிக்கா கொரோனாவை தடுக்க முடியாமல் திண்டாடி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டு மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுவும் குறிப்பாக புளோரிடா மாகாண மக்களுக்கு! கொரோனாவை விட மோசமான ஒன்று வரும் ஜூன் மாதம் வரபோகிறது. அதுதான் அட்லாண்டிக்கில் ஏற்படவுள்ள புயல் சீசன். இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில் கொரோனா மோசமானது என்றால் புயல் மிகவும் மோசமானது.
பாதிப்பு அதிகம்
கொரோனா காலத்தில் புயலும் சேர்ந்து வருவதாக அதன் பாதிப்பு இரண்டைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும். அதுவும் பன்மடங்கு பெருகும். இந்த சீசன் ஜூன் மாதத்தில் தொடங்கும். இதனால் பொருளாதார ரீதியிலும் சரிவு ஏற்படும். புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றனர். அதிலும் கொலோராடோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.
4 முக்கிய புயல்கள்
வழக்கமான புயல் சீசனை விட இந்த ஆண்டு பாதிப்புகளும் வீரியமும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 4 முக்கிய புயல்கள் ஏற்படும். அப்போது மணிக்கு 110 மைல்கள் வேகத்தில் காற்று வீசக் கூடும். இந்த நேரத்தில் பாதிக்கப்படும் மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றி பேருந்துகளில் பொது இடங்களில் தங்க வைப்பது வழக்கம்.
நிர்வாகம்
ஆனால் இப்போது கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மக்களை எப்படி கும்பல் கும்பலாக தங்க வைப்பது என்பது குறித்த யோசனையில் பேரிடர் மேலாண்மைக் குழு உள்ளது. இது போன்ற சிக்கலான நேரத்தில் எப்படி சமூக விலகலை கடைப்பிடிப்பது? பாதிக்கப்படும் மக்கள் உறவினர்கள் வீடுகளில் கூட தங்க வைத்துக் கொள்ளமாட்டார்கள். என்ன செய்வது என தெரியாமல் நிர்வாகம் யோசனையில் உள்ளது.